நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு - 2 - அருண்மொழிநங்கை

கொஞ்சநேரம் சூழல் மறந்தது. சுயநினைவே இல்லை. ஏதோ அணிலின் அரவம் கேட்டு விடுவித்துக் கொண்டோம். பிறகு அதிகம் பேசாமல் புன்சிரிப்புடன் நடந்துவந்தோம். நான் விடைபெற்றுக் கொண்டேன்.


கடிதங்கள் தினமும் வரும். சிலசமயம் ஒரே நாளில் இரண்டு கடிதங்களும் வந்ததுண்டு. எல்லாவற்றிலும் உச்சகட்ட உணர்ச்சிநிலைகள். அப்போது ஜெயன் படைப்பாக்கத்தின் உச்சத்தில் இருந்தார். ஒருபுறம் ஷெல்லி, பைரன், கீட்ஸ் எல்லாம் தோற்கும் அளவு ரொமாண்டிக் கற்பனைகள், இன்னொரு புறம் அறிவார்ந்த விவாதங்கள் , பகிர்தல்கள் என கடிதங்கள் எனக்கு மிகுந்த பரவசத்தை தந்துகொண்டிருந்தன. அப்போது அவர் அண்டோனியோ கிராம்ஷி என்ற இத்தாலிய மார்க்ஸிய அறிஞரையும், எரிக் ஃப்ராமையும் ஒரே சமயம் வாசித்துக் கொண்டிருந்தார்.


கிராம்ஷி முசோலினியால் சிறையில் இடப்பட்டு அவர் அங்கே எழுதிய சிறைக் குறிப்புகள்[ Prison notebooks] பிறகு புத்தகமாக வெளிவந்தது. அதை அப்போது ஜெயன் படித்துக்கொண்டிருந்தார். அதில்தான் ஆதிக்க கருத்தாண்மை [Hegemony] என்ற கருதுகோளை முன்வைக்கிறார் கிராம்ஷி. கலாச்சார, சித்தாந்த, மதம் சார்ந்த கருத்துகள் ஒரு பெரிய அதிகாரமாகத் திரண்டு மக்களை அடிமைப் படுத்த முடியும். காலனியாதிக்கம், மதம் சார்ந்த அரசுகள், சர்வாதிகாரம் என்று பல உதாரணங்கள் தந்து அதை நிறுவுகிறார் கிராம்ஷி.


எரிக் ஃப்ராமின் ‘ஆர்ட் ஆஃப் லவிங்’[Art of loving] என்ற புத்தகமும் அப்போது ஜெயனை மிகவும் வசீகரித்திருந்தது. அதில் இருவர் காதலில் விழும்போது ஏற்படும் அந்த உணர்ச்சிகரமான உச்சகட்ட காதலை எப்படி தொடர்ந்து வரும் காலங்களிலும் நீட்டித்து கொண்டு செல்லமுடியும் என்பதை ஃப்ராம் விரிவாக ஆராய்கிறார். இருமனங்கள் இணைய விழையும் உணர்வென்பதே மனிதனில் வரும் ஆதி உணர்வுகளில் ஒன்று என்கிறார் ஃப்ராம். மனிதனின் இருத்தலியல் பிரச்னையின் முக்கிய அம்சமான வெறுமை, தனிமையுணர்வுகளை வெல்லும் ஒரே தர்க்கரீதியான தீர்வு அன்பிலும் காதலிலுமே உள்ளது. தன் துணைமேல் கொள்ளும் அக்கறை, மரியாதை, பொறுப்பு, அறிவு இவற்றினாலேயே காதலை நீண்டகாலம் தக்கவைக்கமுடியும் என்கிறார். அது ஒரு இடைவிடாத பயிற்சி. One should culture or cultivate love என்று குறிப்பிடுகிறார்.


அதில் பற்றியெரியும் உணர்ச்சிகரத்துக்கு இடமில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அது நேர் எதிர்நிலைக்கும் செல்லும். காதலிக்கும் ஆரம்ப நாட்களில் அது உணர்ச்சிகரமானதுதான். முதன்முதலாக இன்னொரு மனதை, ஆளுமையை நுணுகி அறிவதன் பரவசம். நாள் போகப் போக அது சமனப்படவேண்டும். சுயநலவாதிகளால் ஒருபோதும் காதலிக்க முடியாது. தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களுக்கும் அது வாய்க்காது. காதல் ஒருவித சமர்ப்பணமும் கூட. உன் அகந்தையை, அறிவை, தன்னிலையை ஒருவரிடமாவது கழற்றி வைக்க வேண்டும் என்கிறார் ஃப்ராம். ஒருவரிடம் காதல்கொள்ள நீ ஒட்டுமொத்த மனிதகுலத்தையே நேசிக்க வேண்டும். இரண்டும் வேறு, வேறல்ல.


ஜெயன் அந்த புத்தகத்தையே மனனம் செய்திருந்தார். அதில் உள்ள நிறைய வரிகளை எனக்கு எழுதுவார். மேற்கையே இருத்தலியல் சிந்தனைகளும், தனிமனித வாதமும், உறவுகள் பற்றிய அவநம்பிக்கைவாதமும் ஆண்டு கொண்டிருந்த போது எரிக் ஃப்ராம் இப்படியொரு புத்தகத்தை எழுதினார். எனக்கு படிக்க படிக்க பரவசமாக இருந்தது. இது என்ன? இப்படியொரு புத்தகம்? காதலின் பைபிள் போல. 


மறுவாரம் நான் ஊர்செல்ல வேண்டியிருந்தது. ஜெயனுக்கு எழுதி தெரிவித்துவிட்டு சென்றேன். வீட்டின் நிலைமை மனதில் தீயை வாரி இறைக்கும்படி இருந்தது. வழக்கமான அப்பா, அம்மா சண்டை ஒருபுறம். தம்பிக்கு பனிரெண்டாம் வகுப்பு அரசுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் இரு வருடங்களுமே ஒழுங்காக படிக்கவில்லை. டியூஷன் ஒழுங்காக செல்லாமல், பள்ளியில் நடைமுறை பாடத்தேர்வுகள் , திருப்புதல் தேர்வுகள் எதற்கும் செல்லாமல் நண்பர்களுடன் திரிந்துகொண்டிருந்தான். பட்டுக்கோட்டையில் ஒளிந்து திரிய அவனுக்கு ஏகப்பட்ட மறைவிடங்கள். அப்பா உச்சகட்ட கோபத்திலும் அவனைப் பற்றிய கவலையிலும் இருந்தார். நான் அவனுக்கு அறிவுரை கூறினேன். அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. இம்முறை அரசுத் தேர்வு எழுதப்போவதில்லை என்று என்னிடம் தெரிவித்தான். நான் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தேன். பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் ராங்க் எடுத்தவன் எப்படி இப்படி அதல பாதாளத்துக்கு போனான் என்று எனக்கு புரியவில்லை. 


அவனிடம் வேறு விஷயங்கள் பேசும்போது எதேச்சையாக ஜெயனைப் பற்றி தெரிவித்தேன். சும்மா போகிறபோக்கில் ஜெயமோகன் என்று ஒரு எழுத்தாளர் ,எங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். கடிதங்கள் எழுதுவோம் என்று மட்டும் சொன்னேன். எங்கு இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டான். முதலில் பாலக்கோட்டில் இருந்தார், இப்போது தருமபுரிக்கு மாறுதல் கிடைத்து அந்த தொலைபேசி நிலையத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினேன். ஏன் அதைச் சொன்னேன் என்று இப்போது யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த திரில்லை நான் அப்போது விரும்பியிருக்கலாம்.


வீட்டிலிருந்து நான் மதுரை திரும்பி இருவாரங்கள் ஓடிவிட்டன. ஜெயனிடமிருந்து கடிதங்கள் தினம் ஒன்றுவீதம் வந்துகொண்டிருந்தன. நான் சிலசமயம் சிறிய கடிதம் எழுதினால் அங்கிருந்து விஷம் தோய்த்த அம்பாக ஒரு கடிதம் வரும். உனக்கு என்மேல் காதலே இல்லை என்று. மறுநாளே மனமுருகி மன்றாடி ஒரு கடிதம் எழுதுவார். எனக்கு இந்த உணர்ச்சி உச்சநிலைகளும் கொந்தளிப்புகளுமான ஒரு மனிதனை எப்படி கையாள்வது என்று தோன்றும். மலைத்து விடுவேன் சிலசமயம். இடையில் ஜெயன் ஒருமுறை விடுதி தொலைபேசி இணைப்புக்கு அழைத்தார். பேசிவிட்டு இனிமேல் இதில் கூப்பிட வேண்டாம் என்றேன். அதிக நேரம் பேசுவதால் வீணாக யாருக்காவது சந்தேகம் வரும். அதனால் வேண்டாம் என்றேன். ஏதோ பரீட்சை வேறு நடந்து கொண்டிருந்தது.


பரீட்சை என்ற ஒரு ஆயுதம் போதும். ஜெயன் சரணடைந்து விடுவார். நான் இந்த நான்கு வருடத்தில் பாடங்களில் அதிகமும் A  கிரேட் தான் [90%] வாங்கியிருந்தேன் . சிலபாடங்களில் B. [80%] . C கிரேட் மதிப்பு குறைவு. F எடுத்தால் திரும்ப மறுபடி கோர்ஸ் படிக்கவேண்டும் என்று புளுகி வைத்திருந்தேன். அது திருமணத்தை தாமதப்படுத்தும் என்பதால் சொல்பேச்சு கேட்பார்.


திடீரென்று ஒருநாள் அப்பாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பதறிப் போனேன். அப்பா திருச்சியில் படிக்கும்போது இருமுறை மட்டுமே தொலைபேசியில் அழைத்திருக்கிறார். மிக அவசரமான விஷயத்திற்கு. மதுரை கல்லூரி வந்தபிறகு அதுவும் இல்லை. ஆகவே பயத்துடன் எடுத்தேன். 


’’பாப்பா, தம்பியக் காணல. வீட்டவிட்டு போயிட்டான். நாள மறுநாள் கெமிஸ்ட்ரி பரீட்ச. சரியா அவன் படிக்கலன்னு அந்த டுயூஷன் சார் கம்ப்ளயிண்ட் பண்ணியிருந்தார். இப்ப எங்கன்னு தெரியல. பீரோல இருந்த கொஞ்ச ரூபாய எடுத்துகிட்டு போயிட்டான். அம்மா அழுது பொலம்பிகிட்டு இருக்கா. எனக்கு ஒண்ணும் புரியலப்பா’’ என்றார் அப்பா.


எனக்கு திக்கென்றது. எனக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. ’’கவலப் படாதீங்க, அப்பா. அவன் எக்ஸாம் எழுதாம இருக்க தான் எங்காவது போயிருப்பான். மாமாகிட்ட சொல்லி ரெண்டுபேருமா தேடிப் பாருங்க. அம்மாவ கறம்பக்குடில அத்தைகிட்ட விட்டுட்டு போங்க’’ என்றேன்.


ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருந்தது. குழப்பத்துடன் தான் மறுநாள் கல்லூரி சென்றேன். காலையில் சீட் டெக்னாலஜி [seed technology] ப்ராக்டிகல்ஸ். அந்த பேராசிரியர் நிரம்ப கண்டிப்பானவர். சிடுமூஞ்சி என்று பேர் வைத்திருந்தோம். பதினொரு மணி இருக்கும். எனக்கு தருமபுரியிலிருந்து ட்ரங்க் கால் என்று தகவல் சொன்னார் ஒரு அட்டெண்டர். என்னை சிறிய முறைப்புடனே போக அனுமதித்தார் அந்த ஆசிரியர்.


நான் சிறிது கோபத்துடனும், குழப்பத்துடனும் ஃபோனை எடுத்தேன்.


ஹலோ, அருணா. நாந்தான் ஜெயமோகன்.


ஒங்களுக்கு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்? காலேஜுக்கு ஃபோன் பண்ணாதீங்கன்னு.


புத்திகெட்டவளே, பேசிட்டே போகாத. சொல்றதக் கேளு. ஒந்தம்பி என்னத் தேடி தருமபுரி வந்துருக்கான். காணலன்னு நீ பதட்டமா இருப்பன்னுதான் கூப்பிட்டேன், அருணா.


சாரி, ஜெயன். நிஜமாவே மனசே சரியில்ல நேத்திலேர்ந்து. கடவுளே, எப்டி கண்டுபிடிச்சு வந்தான்?


நீ தர்மபுரி டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் ந்னு அவண்ட்ட சொல்லியிருந்தியாம். ஊர்ல யாரக் கேட்டாலும் காமிச்சு குடுப்பாங்க.


இப்ப எங்க இருக்கான்? 


என் ரூமில தான். நான் ஆஃபீஸ் வந்துட்டேன். 


அய்யோ, நான் போட்ட லெட்டர்ஸ் லாம் ஒழுங்கா பூட்டிட்டு வந்தீங்களா? ஆராய்ச்சி பண்ணுவான். ஈசியா கண்டுபிடிச்சுடுவான்.


பெட்டில வச்சு பூட்டி சாவிய எடுத்துட்டு தான் வந்துருக்கேன். போதுமா? ஆனா நாம லவ் பண்றத அவன் கெஸ் பண்ணிட்டாண்டி.


அய்யோ, எப்டி?


ஒன்னப் பத்தி பேசும்போது என் மூஞ்சப் பாத்து கண்டுபிடிக்கிறதா கஷ்டம்.


மாட்டிக்க போறோம். அவன நம்ப முடியாது,ஜெயன்.


சரி, இன்னக்கி நைட் கிளம்பி காலைல அவன மதுர கூட்டிட்டு வரேன். அவண்ட்ட பேசிட்டேன். ஒத்துக்கிட்டான்.


சரி, வாங்க. வக்கட்டுமா?


இரு. நீ ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல வந்து நில்லு. ஒந்தம்பிய பட்டுக்கோட்ட பஸ்ல ஏத்தி விட்டுட்டு நாம ரெண்டுபேரும் மீனாட்சி கோவில் போவோம். வேற திருப்பரங்குன்றம் எங்காவது போலாம்.


ஒண்ணும் புரியலயா? அவன் அப்டியே வேற எங்காவது போய்டுவான். நானே கொண்டுபோய் வீட்ல ஒப்படைக்கணும் அவன.


என் கண்ணுக்குட்டிய பாத்து ரொம்ப நேரம் பேசலாம்னு நெனச்சேனே.


அப்றம், அடுத்தவாரம். சரியா, இப்ப வைக்கிறேன். 


வைத்து விட்டேன். அந்த ஃபோன் இணைப்பு கொடுப்பவரிடமே ஒரு கால் புக் செய்யச் சொன்னேன். பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு. ஹெச். எம். லைனில் வந்தார். நான் இன்னாரின் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தம்பி லெனின் கண்ணன் தருமபுரியில் இருக்கிறான் என்றும் நாளை நான் அவனை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை வருவதாகவும் இந்த தகவலை அப்பாவிடம் மறக்காமல் தெரிவிக்குமாறும் சொன்னேன். அவருக்கும் அவன் காணாமல் போன விஷயம் தெரிந்திருந்தது. மறக்காமல் தெரிவிக்கிறேன் என்றார்.


மறுநாள் சனிக்கிழமை. காலையில் முன்னதாகவே போய் ஸ்டேஷனில் காத்திருந்தேன். இருவரும் வந்தார்கள். ஜெயன் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார். தம்பி இறுகிய முகத்துடன் வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு கண் கலங்கியது. அவன் முன்னே நடக்க நாங்கள் இருவரும் பின்னே நடந்தோம். ஜெயன் ஒரு கடிதத்தை  என் கையில் திணித்தார். நான் அவன் பார்க்கும் முன்பு கைப்பையில் ஒளித்தேன். அவன் பார்த்திருப்பான். ஜெயன் கையை பற்றிக்கொண்டார். நான் தம்பியை கண்ணால் ஜாடை காண்பித்து விலக்கிக் கொண்டேன்.


ஒரு டீக்கடையில் தேனீர் குடித்தோம். பிறகு நான் மெல்ல அவனை பெரியார் பஸ் நிலையம் நோக்கி கொண்டு செல்ல முயன்றேன். அவன் அப்போது முரண்டு பிடித்தான். அங்கே வைத்து தான் பட்டுக்கோட்டை வர முடியாது என்றான். நான் பலவித சமாதானம் கூறினேன். நான் அப்பாவை சமாதானம் செய்துவிடுவேன் என்றும், ஒன்றுக்கும் அவன் பயப்பட வேண்டாம் , பரீட்சை வரும் அக்டோபரில் எழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன். கண்கலங்கி நான் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததை சிலர் கவனிக்க ஆரம்பித்தனர். ஜெயன் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் முகம் கோபம் கொண்டிருந்தது. அவனது பிடிவாதத்தால் அவர் பொறுமையிழந்திருந்தார். 


நான் பேசிக் கொண்டிருக்கும்போதே  சாலையில் நின்று கிளம்பிய ஒரு பேருந்தில் ஓடிச்சென்று ஏறிவிட்டான் என் தம்பி. நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன். ஜெயன் அருகில் வந்தார். 


அருணா, விடு, அவன் கைல காசு இருக்குற வரைக்கும் சுத்துவான். அதுக்கப்பறம் தானா வீடு வந்து சேர்வான்.


அவனுக்கு பணம் எதும் கொடுத்தீங்களா? 


ஆமா, கேட்டான். கொடுத்தேன். மொத மொத மச்சான்கிட்ட கேக்குறான். இல்லன்னு சொல்லமுடியுமா? கருமின்னு நெனச்சுடுவானே.


’’மச்சான், ஆளப் பாரு’’, எனக்கு ஒரே சமயம் ஆத்திரமாகவும், அவர் முகத்தைப் பார்த்து சிரிப்பாகவும் வந்தது.  


இப்ப என்ன பண்றது? அப்பா, அம்மா ரொம்ப எதிர்பார்த்திருப்பாங்க. 


ஒண்ணும் இல்ல. போய் விஷயத்த சொல்லு. புரிஞ்சிப்பாங்க. சரி, வா, நாம மீனாட்சி கோவில் போகலாம். 


கோவில் எப்போதும் போல கூட்டமும், கூச்சலுமாக இருந்தது. எனக்கு மிகப் பழகிய இடங்கள், பிரகாரங்கள், சன்னதிகள், மீனாட்சி. அவளிடம் மனமுருகி தம்பிக்காக வேண்டிக் கொண்டேன். அவன் மனம் மாறவேண்டும் என்று. பிறகு எங்கள் இருவருக்காகவும். திருமணம் தடையின்றி நடக்க அவள்தான் அருள்புரிய வேண்டும் என்றும். ஜெயனின் அம்மாவையும் நினைத்துக் கொண்டு அவரின் ஆசியையும் மானசீகமாக வேண்டினேன்.


பிறகு தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சூழல் பற்றிய பிரக்ஞையே இல்லை.  ஜெயன் என்னை வேறு வேறு விஷயங்கள் பேசி சிரிக்கவைத்தார். அந்த வருத்தமான மனநிலையிலிருந்து என்னை வெளிக்கொண்டு வந்தார். அப்போது நான் உடுத்தியிருந்த மஞ்சள் நிறத்தில் மெரூன் பார்டர் இட்ட காட்டன் புடவை ஜெயனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த அழகிய மஞ்சள் சேலையில் நெருங்கத் தொடுத்த மல்லிகைப் பூ வைத்து, சிறிய தீற்றலாக வைத்த குங்கும, திருநீற்று கீற்றலில் நான் அழகாக இருப்பதாக ஜெயன் கூறினார். திருமணத்துக்குப் பிறகும் அவருக்கு பிடிக்கும் என்று அதை அடிக்கடி உடுத்துவேன்.


மாலைக்குள் நான் பட்டுக்கோட்டை செல்லவேண்டும் என்பதால் கிளம்ப ஆயத்தமானேன். பட்டுக்கோட்டை வரை தானும் வருவதாக கூறினார். நானும் மறுக்கவில்லை. மாறி, மாறி பேருந்துகளில் போகத் தீர்மானித்தோம். மதுரையிலிருந்து திருப்பத்தூர்[ இது வேலூர் திருப்பத்தூர் அல்ல]. திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி. காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை. புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை.


கடைசி பஸ்சில் மட்டும் ஒன்றாக உட்கார்ந்து பயணம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டேன். பட்டுக்கோட்டை பயணிகள் யாராவது அப்பாவுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் வம்பு என்று. இருவரும் கிளம்பினோம்.


தாகம் தொண்டையை வறட்டியதால் சர்பத் குடிக்கலாம் என்றார். நான் எனக்குப் பிடித்த ஆரஞ்சு எசென்ஸ் விட்ட எலுமிச்சை ஜூஸை ஐஸ் கட்டிகள் மிதக்க பெரிய கண்ணாடி டம்ளரில் கற்பனை செய்து ஆவலுடன் கடையை நெருங்கினேன். கடையை நெருங்கியதும் ஜெயன் ”ரெண்டு ஜூஸ் உப்பு போட்டு. ப்ளெயின்” என்றார்.


எனக்கு சிறிய அதிர்ச்சி. உப்பு போட்டு அதை குடிப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது. முதல் முதலாக எப்படி மறுப்பது? இந்த சிறுபத்திரிகைக் காரர்கள் எல்லாம் மாற்று ரசனை கொண்டவர்கள் போலிருக்கிறது. பொதுச் சமூகம் என்ன விரும்புகிறதோ அதை விரும்ப மாட்டார்கள் போல என்று நினைத்துக்கொண்டு மல்லுக்கட்டி மருந்து மாதிரி குடித்துவைத்தேன்.


பஸ்ஸில் ஏறி அமர்ந்து டிக்கெட் எடுத்து சூழல் மறந்து பேசிக் கொண்டே சென்றோம். யாரும் எங்கள் பார்வைப் புலத்தில் படவில்லை. நாங்கள் காதலர்கள் என்பதை பேருந்தே அறிந்திருக்கும். அவ்வளவு கூட்டமில்லை. வெயிலால் பாதிப்பேர் உறக்கத்தில் இருந்தார்கள். கையைப் பற்றிக்கோர்த்துக் கொள்வது, ஏதாவது ரகசியமாக சொல்வதுபோல் காதருகே வந்து மூக்கால் கன்னத்தை உரசுவது, தோள்மீது கைபோட்டுக் கொள்வது என்று ஒரே கிளர்ச்சியுடன் அந்தப் பயணம் இருந்தது. பிற்பாடு அவர் எழுதிய ’அந்த முகில், இந்தமுகில்’ குறுநாவலில் வரும் ராஜமுந்திரிவரை உள்ள பயணத்தை இதன் சாயலுடன் ஜெயன் அமைத்திருப்பார்.


காரைக்குடியில் மதிய சாப்பாட்டுக்காக ஹோட்டல் தேடிச் சென்றோம். சைவ ஹோட்டல். கைகழுவி, முகம் கழுவி மேஜையில் அமர்ந்தோம். பாட்டு ஒன்று ஒலித்தது. ’வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே’ சலங்கை ஒலியில் எனக்குப் பிடித்த எஸ்.பி.பியும் ஷைலஜாவும் பாடியது. ’எனக்கு புடிச்ச பாட்டு’ என்றேன். ’எனக்கு எஸ்.பி.பிய அவ்வளவா புடிக்காது, குரல்ல கிம்மிக்ஸ் பண்ணுவார்’, என்றார். ’என்ன இது, இந்த தீவிர இலக்கியவாதிகளுடன் வாழக் கொஞ்சம் கஷ்டம் தான் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன்.


ஒரு பாட்டுகூட அவரோடது புடிக்காதா ஒங்களுக்கு?


இந்த சிரிப்பு, கிம்மிக்ஸ் இல்லாத ஆரம்ப கால பாட்டு புடிக்கும்.


’அய்யோ, அந்த சிரிப்புக்குத் தானே நாங்கள் காத்துக் கிடப்போம்’ என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டேன். ’சரி, அருண்மொழி, உன் காதலுக்கு முதல் பலி எஸ்.பி.பி தான் போலிருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்’ என்று சொல்லிக் கொண்டேன்.


யேசுதாஸ் பிடிக்குமா?


ம்ம்… ரொம்ப.


அப்பாடா. யேசுதாஸ் பிழைத்துக் கொண்டார்.


வெளியில் வந்து பிஞ்சு வெள்ளரியை பார்த்ததும் எனக்கு ஆவல் வந்தது. எப்போது ஊருக்குப் போனாலும் வாங்கிப் போவேன். பஸ்சை சுற்றிவந்து ஜன்னலோரம் விற்பார்கள். தீவிர இலக்கிய ஆட்களின் பட்டியலில் வெள்ளரிக்காய் விலக்கப் பட்ட காயாக இருந்தால். எதற்கும் கேட்டு விடுவோம். “வெள்ளரிக்காய் அம்மாவுக்கு பிடிக்கும். வாங்கட்டுமா?” என்றேன்.


“ம்ம்.. வாங்கு . எனக்கும் பிடிக்கும்.” என்றார்.


யோசித்துக் கொண்டேன். திருமணத்துக்கு முன்பு வரை வாலைச் சுருட்டி, அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். பட்டுக்கோட்டையில் அறை எடுத்து அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் ஊர்போவதாக சொன்னார். முதல்நாள் தம்பியுடன் ரயிலில் வந்தபோது அவன் இடையில் எங்காவது இறங்கி சென்றுவிட்டால் என்ன செய்வது என்று சரியாகத் தூங்கவில்லை என்று தெரிவித்தார். எனக்கு பாவமாக இருந்தது.


தந்தை சற்குணம், அருண்மொழி நங்கை,
தாயார் சரோஜா, தம்பி லெனின் கண்ணன்
புதுக்கோட்டை சென்றவுடன் நான் முன்புறம் சென்று அமர்ந்துகொண்டேன். அவர் பின்புறம் அமர்ந்து சிறிது நேரத்திலேயே உறங்கி விட்டார். பட்டுக்கோட்டை வந்ததும் இறங்கி அவரிடம் கண்களாலேயே விடைபெற்று வளவன்புரம் செல்லும் டவுன்பஸ்சில் போய் ஏறிக்கொண்டேன். வீட்டிற்கு தம்பியில்லாமல் செல்வது கொஞ்சம் கலக்கமாக இருந்தது. 


வீட்டில் அம்மா, அப்பா, அத்தை, மாமா, பத்தூர் சித்தி, சித்தப்பா எல்லோரும் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். என்னை மட்டும் பார்த்ததும் எல்லோரும் குழம்பினர். அம்மாவின் கண் கலங்கியது. பொட்டுகூட வைத்துக் கொள்ளாமல் அம்மா முகம் அழுது, வீங்கி, வெறிச்சோடியிருந்தது. நான் சென்றவுடன் அம்மாமீது சாய்ந்து அழுதேன். அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பஸ் ஏறியதை சொன்னேன்.


’’நீ ஏன் பாப்பா அழுவுற? காசு இல்லன்னா போக்கத்தவன் தன்னால வருவான் பாரு’’ என்றார் அப்பா.


மாமா  ’’அருணா, நீ அவன் தருமபுரி போயிருக்கான். மதுரையிலேர்ந்து கூட்டிட்டு வரேன்னு ஃபோன்ல சொன்னதா ஹெச்.எம் சொன்னாராமே. யார் அங்க அவனுக்கு தெரிஞ்சவுங்க?’’ என்றார்.


அவசரத்தில் ஹெச்.எம்மிடம் உளறி வகையாக மாட்டிக்கொண்டு விட்டோமே என்று தோன்றியது . இனி இதை பக்குவமாக டீல் செய்ய வேண்டும். ’’இல்ல மாமா, யாரோ அவனுக்கு தெரிஞ்ச ரைட்டர் ஒருத்தர் அங்க இருக்காராம். அதனால அவர தேடி போயிருக்கான். அவர்தான் அவன மதுர வர கூட்டிட்டு வந்து விட்டார். நான் காலைல ஸ்டேஷன்ல வச்சு பாத்தேன். அப்புறம் நான் அவன தனியா கூட்டிட்டுபோய் சமாதானம் பண்ணேன். அப்பாகிட்ட நான் சொல்லி சமரசம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லியும் கேக்காம போய் ஓடுற பஸ்ல போய் ஏறிட்டான். அவர் கூட எதிர்பாக்கல. அதிர்ச்சியாயிட்டார். அப்புறம் நீங்க போய் வீட்ல சொல்லுங்க, ஒங்க அப்பா, அம்மா எல்லோரும் எதிர்பாத்துட்டிருப்பாங்க என்றார். அவர் தருமபுரி கிளம்பினார். நான் இங்க வந்துட்டேன்’’ என்றேன்.


நான் சொன்ன இந்த பாதிகட்டுக்கதையை எல்லோரும் முழுவதும் நம்பினார்கள். எனக்கு இப்படி பொய் சொல்கிறோமே என்று குற்ற உணர்வு ஒருபுறமும், கிளுகிளுப்பு ஒரு புறமும் வந்தது. அப்புறம் வழக்கம்போல் மாறி, மாறி எல்லோரும் இதைப்பற்றியும், அவன் படிப்பில் சொதப்பியது குறித்தும், அப்பாவின் அதீத கண்டிப்பும், அம்மாவின் செல்லமும் அவனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது பற்றியும் பேசிக்கொண்டனர். ஒருவகையில் பேசிப்பேசி எளிதாக்கி அச்சூழ்நிலையை அவர்கள் கடக்கமுயல்வதை புரிந்து கொள்ளமுயன்றாலும் எனக்கு அது மிகுந்த ஆயாசத்தை தந்தது.


நான் தூக்கம் வருவதாக கூறி சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக் கொண்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. மனம் முழுவதும் ஜெயன் நினைவுதான். மிக அருகே அமர்ந்து பஸ்ஸில் செய்த அந்தபயணம் தந்த கிளர்ச்சி என்னைத் தூங்கவிடவில்லை. அவர் முகம், புன்னகை, கையை வருடியபடியே அவர் பேசியவை, மூக்கால் கன்னத்தை உரசிய அந்தக் குறும்பு, வியர்வை மணம் எல்லாம் சேர்ந்து வெட்கத்தையும்,  புன்னகையையும் வரவழைத்தது. அவரும் இதே பட்டுக்கோட்டையில் என்னை நினைத்துக்கொண்டே தூக்கம் வராமல் என்னைப் போலவே இருப்பார் என்பதை கற்பனைசெய்து தலையணையில் குப்புற முகம் புதைத்து பிறகு எப்போதோ உறங்கிப்போனேன்.


மறுவாரம் மதுரையில் கல்லூரியில் தொடர்ந்து அசைன்மெண்ட்கள், சிறுதேர்வுகள் இருந்தன. சனிக்கிழமை பாதிநாள் தியரி வகுப்பு இருக்கும். வந்து சாப்பிட்டு ஒரு தூக்கம்போட்டு எழுந்தால் மாலை ஒரு திரைப்படம் ஆடிட்டோரியத்தில் இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக போகவேண்டும். மாமி எங்களை பத்திக் கொண்டு செல்வாள். நாசரேத், சாத்தான்குளம் தீவிர பெந்தகோஸ்து பிள்ளைகளுக்கும் விலக்கில்லை. அவர்கள் முணுமுணுத்தபடியே எங்களுடன் வருவார்கள்.


 ஜெயன் அதற்கு அடுத்தவாரம் வருவதாக சொன்னார். எனக்கு ஒருநாள் முழுதும் செலவழிக்க நேரம் இல்லை. எனவே ஞாயிறு மீனாட்சி கோவிலில் சந்தித்து பேசி பிரிந்தோம். நேரம் சீக்கிரம் ஓடி விடுவதுபோல் இருக்கும். இந்த மூன்றுமணி நேரத்துக்காக அவர் ரயிலில் பயணம்செய்து வருவது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் குற்றவுணர்வையும் கொடுக்கும். ஆனால் காட்டிக் கொள்ளமாட்டேன். ஒருவாரம் விட்டு மறுவாரம் வருவதாக சொல்லிச் சென்றார். கடிதங்கள் வழக்கம்போலவே இருபுறமும் பறந்துகொண்டிருந்தன. கடிதங்களில் காதலன் பாவம் மறைந்து கணவன் பாவம் தென்பட்டது. உரிமையும் கொஞ்சலும் அடுத்தகட்டத்துக்கு சென்றுவிட்டிருந்தன. என்னை நாணிக் கண் புதைக்கச் செய்யும் வரிகள்.


திடீரென்று ஒரு நாள்  ஹாஸ்டல் மீட்டிங்கின்போது எங்கள் விடுதியின் வார்டன் பெண்மணி ஒரு விஷயம் சொன்னார். ’’இனிமே ஒங்களுக்கு வரும் லெட்டர்ஸ பிரிச்சு ராண்டமா செக் பண்ணுவோம்’’ என்று. எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு வயிற்றைக் கலக்கியது. எப்படியும் அதிக எண்ணிக்கையிலும், பக்க அளவிலும் அசைன்மெண்ட்கள் போல் எனக்குதான் வந்துகொண்டிருந்ததால் நான் மாட்டி விடுவேன். நிச்சயம் அப்பாவுக்கு தெரிவித்துவிடுவார்கள். என் அப்பா வந்து வார்டனின் முன்பும், கல்லூரி டீன் முன்பும் தலைகுனிந்து என்னுடன் நிற்கும் காட்சியை கற்பனைசெய்து எனக்கு தலைசுற்றியது.


என் விடுதியிலேயே நான் ஜெயனைக் காதலிப்பதை பகிர்ந்துகொள்ளும் என்னுடைய ஒரே தோழி அனுராதாதான்.  அவளும் நானும், அமுதாவும் ஒரே அறைதான். அமுதா ஒழுங்கான பிள்ளை. காதல் என்பதெல்லாம் ஒழுங்கீனமானவர்கள் செய்வது என்று நினைப்பவள். அனுராதா பெங்களூரைச் சேர்ந்தவள். கன்னடம். ஆனால் தமிழ் நன்றாகப் பேசுவாள், படிப்பாள். அவள் பாட்டிவீடு தேனி அருகே உள்ள உத்தமபாளையம். அங்கு தங்கி படித்தவள்.


 நான் சொல்லாமலேயே முதல் இரண்டு வாரத்தில் ஜெயனைக் காதலிப்பதை தெரிந்துகொண்டாள். என்னிடம் கேட்டாள்.


ஏய், பொண்ணே, லவ்ல இருக்கியாடி?


எப்டி கண்டுபிடிச்ச அனு?


இது பெரிய வித்தையா? ஒன் மூஞ்சப் பாத்தாலே தெரியுதே. எப்ப பாரு ட்ரீமடிச்சுட்டு இருக்க. கத்தை, கத்தயா லெட்டர்ஸ் வருது. மணிக்கணக்கா, படிக்கிற. சொல்லுடி.


ஆமா… அனு, ஒங்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். அவர் ரைட்டர், மலையாளி, தருமபுரில இருக்கார். நாங்க இப்போ இந்த கோர்ஸ் முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.


வீட்ல சொல்லிட்டியா?


இல்ல… சொல்லி கன்வின்ஸ் பண்ணனும்.


சரி… அதப்பத்தி இப்ப யோசிக்காத. எஞ்சாய்..


மறுநாள் நான் ஜெயனுக்கு ட்ரங்க் கால் புக் செய்து பேசினேன்.


ஹலோ, ஜெயன். நான் அருணா பேசுறேன்.


என்ன அருணா, பதட்டமா இருக்க? ஏதாவது பிரச்சனையா?


இங்க இனிமே லெட்டர்ஸ பிரிச்சு ராண்டமா செக் பண்ணப் போறாங்களாம். அனேகமா நாந்தான் மாட்டுவேன். அதுனால…


என்ன அராஜகமா இருக்கு. லெட்டர்ஸ் ஒருத்தங்களோட பிரைவஸி இல்லயா? நீங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலயா?


நாங்க என்ன ஒங்கள மாரி தொழிற்சங்கமா வச்சுருக்கோம் போராடுறத்துக்கு. சொல்றத கேளுங்க. சின்ன கடிதம் போதும். அதுவும் டெய்லி வேண்டாம். அனுராதான்னு அட்ரஸ் போட்டு எழுதுங்க. நான் அவகிட்ட சொல்லிக்குறேன். ஃப்ரம் அட்ரஸ் ஜெயந்தின்னு போட்டு எழுதுங்க. கோட் வேர்ட்.


சே…சே… கேவலமா இருக்குடி.


காதல நம்ம சொசைட்டி கேவலமாத் தான் நெனைக்குது, ஜெயன்.


அனுவிடம் தெரிவித்தேன். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கடிதம் எழுதினார். நான் சொன்னமாதிரியே. ஆனால் ஃப்ரம் அட்ரஸ் மட்டும் மலையாள லிபியில் எழுதினார். அவள் பிரிக்காமல் என்னிடம் தந்தாள். எனக்கு ஜெயனை நினைத்து பாவமாக இருந்தது. 


ஆனால் இருவாரங்களில் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. முதுகலை படிக்கும் மாணவிகள் கடுமையாக இதை எதிர்த்து கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். ஏனெனில் அவர்களில் சிலர் காதலில் இருந்தனர். சிலர் திருமணம் முடித்து கணவனைப் பிரிந்து இங்கு விடுதியில் தங்கிப் படித்தனர்.


அடுத்த ஞாயிறு முழுநாளும் நாங்கள் காலை முதல் மாலை வரை சிட்டன்குளம் கரையில் அமர்ந்து பேசினோம். அதில் திருமணம் குறித்து ஜெயன் தீவிரத்துடன் பேசினார். நான் வழக்கம்போல் ஜோக்கடித்துக் கொண்டிருந்தேன்.


அருணா, சீரியஸா யோசிக்கணும். நீ நம்ம கல்யாணம் பத்தி என்ன ஐடியா வச்சிருக்க?


தாலி கட்டி, மால மாத்தி அப்டித்தான பண்ணுவாங்க.


அறிவுகெட்ட முண்டம், ஒழுங்கா சொல்லுடி.


எப்ப கல்யாணம் ஜெயன்?


ஒனக்கு இந்த கோர்ஸ் எப்ப முடியுது? டீடைல்ஸ் சொல்லு.


ஜூன் செகண்ட் வீக்ல இருந்து ஜுலை ஃபர்ஸ்ட் வீக் வர மூணுவாரம் ஆல் இண்டியா டூர் இருக்கு ஜெயன். அது முடிச்சு வந்து அனேகமா ஜூலை கடசி கோர்ஸ் முடிஞ்சிடும்.


ஃபைனல் எக்சாம் எல்லாம் முடிஞ்சிடுமா?


ஆமா. நாலு வருஷம் முடிச்சு நாங்க சுதந்திரப் பறவயா பறந்து போவோம்.


செர்டிஃபிகேட்ஸ்?


அது ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ கழிச்சு கெடைக்கும்.


சரி, நம்ம கல்யாணம் ஆகஸ்டில ரெண்டாம் வாரம் கழிச்சு நடந்தாகணும். ஏன்னா அப்ப தான் ஆவணி பொறக்குது.


எப்ப பொண்ணு பாக்க வருவீங்க?


வெளயாடுறியா? இல்ல சீரியசா பேசுறியா?


சீரியஸ் ஜெயன். அண்ணன்ட்ட சொல்லி அவரையும் கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்கள்ள?


அப்ப சொன்னேன். இப்ப யோசிச்சு பாத்தேன். நாம யாருக்கும் தெரியாம ரெஜிஸ்டர் மாரெஜ் பண்றதுதான் நல்லதுன்னு தோணுது, அருணா.


ஏன் ஜெயன்? எங்க அப்பாக்கு பெரியார்மேல இண்டிரெஸ்ட் உண்டு. ஒத்துப்பாங்க. இல்லாட்டியும் எங்க அத்த, மாமா என்ன புரிஞ்சிப்பாங்க. நான் அவங்ககிட்ட சொல்லி அப்பாட்ட பேச வச்சு சம்மதிக்க வச்சிடுவேன்.


இல்ல. பெரியார் எல்லாம் கொள்கை அளவுலதான். ஒங்க அப்பா மாதிரி ஆளுங்களுக்கு ஜாதிப்பற்று, இனப்பற்று ரொம்ப இருக்கும். நான் மலையாளி என்பது அவங்களால ஜீரணிக்க முடியாததா இருக்கும். கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. அப்றம் எனக்கு அப்பா, அம்மா இல்ல. நெறய சொந்தங்கள் எதுவும் இல்ல. அண்ணன், தங்கச்சி மட்டும்தான். எல்லாமே மைனஸ் பாயிண்ட்ஸ்.


அப்டியா? அப்ப நான் தெரியாம பொறப்பட்டு வரணுமா?


ஆமா, ஆகஸ்ட்ல எப்ப வரணும்னு நான் அப்றம் சொல்றேன். மாரேஜ் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிட்டா நம்மள ஒண்ணும் பண்ண முடியாது. அப்றமா அவங்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி கால்ல விழுந்துடலாம். மன்னிச்சா மன்னிச்சு ஏத்துப்பாங்க.


எனக்கு கலக்கமாக இருந்தது. அப்பா, அம்மா, என் உறவுகள் என்னை வாழ்நாள் முழுவதும் புறக்கணித்துவிட்டால். நினைக்கவே நடுக்கமாக இருந்தது. ஜெயனும் புரிந்துகொண்டு மிக ஆறுதலாக பேசினார். ’உன் பெற்றோர் உன்மேல் உயிரையே வைத்திருப்பவர்கள். மன்னித்து விடுவார்கள். உடனே இல்லாவிட்டாலும் நமக்கு குழந்தை பிறந்தபிறகு சேர்ந்துவிடுவார்கள்’. குழந்தை என்றவுடன் எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நமக்கு கொஞ்ச ஒரு குழந்தை என்ற நினைவே தித்திப்பாக தோன்றியது.


’’அருணா, உனக்கு 21 வயது முடிந்துவிட்டதா? .அப்பதான் மாரேஜ் செல்லுபடியாகும்’’ என்றார்.


இருவரும் விரல்விட்டு எண்ணிப்பார்த்தோம். எனக்கு அந்த மார்ச்சோடு 21 வயது முடிந்திருந்தது. அப்போது மேமாதம் நடந்துகொண்டிருந்தது. அவர் அண்ணனிடமும் திருமணம் முடிந்தபிறகுதான் தெரிவிக்கப் போவதாக சொன்னார். அவர் இப்படியான திருமணத்துக்கு எதிரானவர். கொஞ்சம் பழமைவாதி என்றார்.


பிறகு நான் எங்கள் கல்லூரியின் இந்திய சுற்றுலா பற்றிக் கூறினேன். கடிதங்கள் போடமுடியாது என்றவுடன் அவர் முகம் வாடியது. ’’ஏன் மூணுவாரம் வச்சிருக்காங்க,’’ என்றார்.


’’நாக்பூர், ஜெய்ப்பூர், உதய்ப்பூர், ஜோத்பூர், லூதியானா, டெல்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹரித்துவார், டேராடூன் எல்லாம் போறோம்’’, என்று அடுக்கிக் கொண்டே போனேன். பிறகு சுந்தரராமசாமி அவர்களின் கடிதம் எனக்கு வந்ததை தெரிவித்தேன். சு.ரா என்ன எழுதியிருந்தார் என்று கேட்டார்.


நீங்க என்னப் பத்தி நெறய அவர்ட்ட சொல்வீங்களாம். அப்றம் என்னோட வாசிப்பு பத்தி அவர்க்கு சந்தோஷம் என்றார். நீங்க இப்பதான் நெறய கிரியேட்டிவ்வா எழுத ஆரம்பிச்சுருக்கீங்க. அருண்மொழியின் கடாட்சம்தான் காரணம் என்று எழுதியிருக்கார். ஜெயன் புன்னகைத்துக் கொண்டே இருந்தார்.


மாலையில் திரும்பும்போது அதே மரத்தடியில் அணைப்பும், முத்தங்களும்.  தடித்த அடிமரம் கொண்ட அம்மரம் உண்மையில் ஒருபக்கம் கொடியடர்ந்த வேலியும் மறுபுறம் தனிமையான குளக்கரை சூழ இருப்பது ஒரு அடைக்கல உணர்வைத் தந்தது. 


தொடர்ந்து இருவாரங்கள் வேலைகளும் படிப்பும் இருந்தன. மே 21, 1991. அன்று இந்திய அரசியலில் ஒரு துரதிருஷ்டமான நாள். அன்றுதான் மனித வெடிகுண்டினால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். எங்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. 1984 முதல் 1989 வரை பிரதமராக இருந்தவர். போஃபோர்ஸ் ஊழல் 1989ல் வெளிவந்து அது அவருடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது. வி.பி.சிங் வெற்றிபெற்று ஒரு வருடம் ஆட்சி செய்தார். அந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள். சந்திரசேகர் அடுத்த வருடம் பிரதமரானார். அரசில் நிலையின்மை நிலவி மீண்டும் 1991 ல்  பாராளுமன்றத் தேர்தல் வந்தது.


அதற்கு காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு வந்தபோதுதான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். மனிதவெடிகுண்டான தனுவும் பலியானாள். நாங்கள் தூர்தர்ஷன் முன் பழியாய்க் கிடந்தோம். திரும்பத் திரும்ப அந்தக் காட்சிகளைக் காட்டியது எங்களுக்கு கலக்கத்தை உண்டுபண்ணியது. ‘அமுல் பேபி மாதிரி இருந்தாரே, போய் சேந்துட்டாரே’ என்று எல்லோரும் புலம்பினோம். தமிழ்நாட்டில் வைத்து கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. செய்தித் தாள்களும், ஜூனியர் விகடனும் மனமகிழ்மன்ற அறையில் கிழிபட்டன. போட்டிபோட்டு படித்தோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. போலீஸும் சி.பி.ஐயும் திணறின.


இருநாட்கள் கழித்து ஜெயனிடமிருந்து ஹாஸ்டலுக்கு ஃபோன். 


அருணா, நீ பத்திரமா இருக்கேல்ல.


என் பத்தரத்துக்கு என்ன கொறச்சல்?


இல்லடி. எங்க பார்த்தாலும் பரபரப்பா இருக்கு. நீ சும்மா கண்ட நேரத்துல டவுனுக்கு போகாத.


கண்ட நேரத்துல எங்கள வுட மாட்டாங்க. நா போமாட்டேன்.


சரி, டூர் உண்டா?


டூர் உண்டே. அது எங்க சிலபஸ்ல ஒரு பாடம்,ஜெயன். கடசி வருஷம், கடசி ட்ரைமஸ்டர்.


அது ரிஸ்க். இன்னம் குற்றவாளிகள புடிக்கல, தெரியுமா?


தெரியும். வேறென்ன? வைக்கவா?


அருணா. ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?


என்ன சொல்லுங்க, கேட்டுட்டு முடிவு பண்றேன்.


அதுவந்து… நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா ஒரு கட்டுரை மலையாளத்துலயும், காலச்சுவடுலயும் எழுதுனதால ரெண்டு போலீஸ்காரங்க ரெண்டு நாள் கழிச்சு என் ரூமுக்கு வந்து விசாரிச்சாங்க. என்ன ஒண்ணும் சொல்லல. ஆனா ரூம்ல இருந்த பத்திரிகைகள், துண்டு பேப்பர்கள், எழுதிய மானுஸ்கிரிப்டுகள், கடிதங்கள் எல்லாத்தையும் தொடச்சி எடுத்துட்டு போயிட்டாங்க. 


நான் எழுதுனது?


அதுவும்தான்.


பெர்சனல்னு சொல்ல வேண்டியதுதானெ? வாயில கொழுக்கட்டையா வச்சிருந்தீங்க.


நான் சொல்றத எங்க கேக்குறான்? 


லவ் லெட்டர கொண்டுபோய் என்ன பண்ணப் போறாங்க? அய்யோ, சே , கேவலமா இருக்கு. கண்டவனும் படிப்பான். அவங்க எல்லாரும் டேபிள சுத்தி ஒக்காந்து என் லெட்டர படிச்சு சிரிக்கறத நெனச்சாலே நாக்க புடிங்கிக்கலாம் போல இருக்கு. ஒங்களுக்கு வீரமே இல்ல. துணிஞ்சு சொல்ல வேண்டியதுதான.


சொல்லிப் பாத்தேன். ஆனா ரொம்ப எதுத்தா சந்தேக கேஸ்ல என்ன உள்ள வச்சுட்டாங்கன்னா.


அய்யோ, சரி விடுங்க. போனாப் போகுது.


அ.மி, சு.ரா, கோணங்கி, பாவண்ணன், யுவன் எல்லாக் கடிதங்களும் போயிடுச்சி.


எனக்கு பாவமாக இருந்தது. ஆறுதல் சொல்லி ஃபோனை வைத்தேன்.


எல்லா சாலைகள் , வாகனங்கள், ரயில்கள், வான் வழி, கடல் வழி அனைத்தும் கண்காணிக்கப் பட்டன. ஆனால் முருகன், சாந்தன், ஒற்றைக்கண் சிவராசன், இன்னும் சிலரும் உட்பட அனைவரும் ஒரு பால் டேங்கர் லாரியில் அமர்ந்து பெங்களூருக்கு தப்பியது இருமாதங்கள் கழித்துதான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒரு ஒட்டைவழியே ஏணிவைத்து அதில் இறங்கி உட்கார்ந்து பயணம் செய்யமுடியும் என்பதை நம் காவலர்களால் யூகிக்க முடியவில்லை. இந்த வழக்கை துப்புதுலக்கிய கார்த்திக்கேயன் என்னும் சி.பி.ஐயின் புலனாய்வு அதிகாரியின் உதவி அலுவலராக இருந்த ரகோத்தமன் எழுதிய ராஜிவ் காந்தி படுகொலை குறித்த புத்தகத்தை நான் திருமணத்திற்கு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு திரில்லர் நாவலின் பரபரப்புடன் படித்தேன்.

- தொடரும்...

***

5 comments:

  1. தேவமலர் நாவலில் இப்படி ஒரு இடம் வரும், " ஒளி அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து மேலும் வந்தன. அந்த அலைகளுடன் புதிய விந்தைகள், புது அற்புதங்கள், புது ஆனந்தங்கள், புது அழகுகள் தோன்றியபடி இருந்தது...."
    இந்த வரிகளை நினைவுபடுத்துகிறது அருண்மொழி நங்கை அவர்களின் அனுபவப் பகிர்வு. ஒரு இசையுடன் கூடிய புகைவண்டிப் பயணம் செய்யும் உணர்வு. சிறப்பு.

    ReplyDelete
  2. ஒளியின் கண் கொண்டு வாழ்வை பார்த்தல்,வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  3. ஒரு நல்ல குறுநாவல் போல விறுவிறுப்பாக போகிறது. புனைவுக்கு மிக நெருக்கமான படைப்பு. இதனை வாசிக்கும்போது வீட்டம்மணியிடமிருந்து கொஞ்சம் இடையூறு உண்டானது. எனக்குக் கோபம் வந்தது. ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய வசீகரம் நிறைந்த ஈர்ப்பான எழுத்து நடை.

    ReplyDelete
  4. Captivating read! The literary command has now established itself so well. AC&RI Madurai Campus references create reverberations of admirable nostalgia... Looking forward to read more of this genre & from Author Aruna Jeyan...

    ReplyDelete
  5. என்ன படித்தாலும் எதனை உள்வாங்கிக்கொண்டாலும் முணுமுணுப்பிடையே ஒருவித புன்னகை இதழில் மிதந்துகொண்டே இருக்கின்றது .படித்து முடித்த பிறகு காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் காதலின் வேலைதான் அது.

    காலத்தால் உடலைத்தான் பழசாக்க முடிகிறது.மனத்தை அல்ல.மனம் நிகழ்காலத்திலேயேதான் இருக்கின்றது.எப்போதும் புத்தம் புதிதாக அதில் மலர்ந்திருக்கின்ற காதலால்.அந்தப் புன்னகை இதன் காரணமாகவே குண்டுவெடிப்பைப் படிக்கும்போதுகூட நகர மறுக்கின்றது.

    "காடு"நாவல் எந்தப்பக்கம் திரும்பினால் மீண்டும் எப்போது நீலியை நோக்கித் திரும்பும் என்கின்ற எதிர்பார்ப்பு வாசிக்கும்போது இருக்கும்.ஒரு மனம் "இது சில்லியாக இல்லையா?"என்று கேட்கும்.""அதனாலென்ன..."என்று
    இன்னொரு மனம் அதற்கு வக்காலத்து வாங்கி ஆசுவாசிக்க வைக்கும்.

    காதலிக்கும்போதும் காதலைப்படிக்கும்போதும் இப்படி எண்ணற்ற மனங்கள் உலவித்திரியும் உடலெங்கும்.இவ்வெழுத்தெங்கும் அப்படியொரு காதல்..!!

    ReplyDelete

Powered by Blogger.