அன்பெனும் விருது - கலாப்ரியா

குமரகுருபரன் விருது விழா 2018
சுபமங்களா என்று நினைவு. இரண்டு பக்கத்திற்கு படங்களுடன் ஒன்றோ இரண்டோ, சற்றே நீளமான கவிதைகள் வந்திருந்தன. கவிதையில் என் சாயல் தெரிந்ததாலோ அல்லது எனக்கு புழக்கமான தளங்கள் இருந்ததாலோ, கவிதை எனக்கு பிடித்திருந்தது. அப்போதுதான் ஜெயமோகன் பெயர் மனதில் பதிந்தது. ஆனால் கவிதை அவரையோ அல்லது அவர் கவிதையையோ கை விட்டு விட்டார்கள். (ஆனாலும் தன் மின்னஞ்சல் முகவரியில் writer poet என்ற பதம் இன்னும் இருக்கிறது.) என்னைப் பொறுத்து அது அவருக்கு ஒரு நல்ல விஷயம். வாசகர்களின் கவனம் அவர்பால் குவிய அவர் உரைநடையை தேர்ந்து கொண்டதுதான் சரியான விஷயம் என்று சொல்வேன். சுபமங்களாவில் அவர் நிறைய கதைகள் எழுதினார். `ஜகன்மித்யை’ எல்லார் கவனத்தையும் ஈர்க்கிற  நல்ல கதையாக வந்தது. கணையாழியில் அவரது கதைகள் நிறையவே வெளிவந்தன.


அதில் ’டார்த்தீனியம்’ குறுநாவல் என்னை மிகவும் கவர்ந்தது. அதைப் பற்றிய ஓவியமும் குறிப்பும் அந்த இதழ் அட்டைப்படத்திலேயே வந்திருந்தது. அப்போது கணையாழி அச்சுப் பிழைகளுக்கு பேர் போனதாக இருந்த காலம். (கொஞ்ச காலம் அப்படி இருந்தது.) மேலோட்டமாகப் பார்த்த போது பார்த்தீனியத்தைத்தான் அப்படி போட்டு விட்டார்களோ என்று நினைத்து லேசான கவலையும் கதையில் அதிக ஆவலுமாக புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். எதிர்பார்த்தது போலவே என்னை வெகுவாகக் கவர்ந்தது. 


அது மேஜிக்கல் ரியலிசம் தமிழில் அறிமுகமாகிற கோணங்கியின் சிறுகதைகளின் காலம். ஜெயமோகன் அப்போது தர்மபுரி, தொலைபேசி நிலையத்தில் பணியில் சேர்ந்த புதிது என்று நினைவு.  பாலக்கோடு கிராமத்தில் இருந்தார். அந்த முகவரிக்கு டார்த்தீனியத்தைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு மிகவும் மகிழ்ச்சியாக பதில் எழுதியிருந்தார். ஒரு சீனியரிடமிருந்து வந்த அருமையான பாராட்டு என்ற ரீதியில் இருந்தது அந்தக் கடிதம். அது அவருக்கும் எனக்குமான நெருக்கத்தின் முதல் வித்து. அது அந்த டார்த்தீனியம் போலவே வளர்ந்தது. (அதன் வேகத்தையே, இப்படி குறிப்பிடுகிறேன்.) 


அப்புறம் சுந்தர ராமசாமி பொறுப்பில் வந்த காலச்சுவடில் அவரது கதைகள் படித்த நினைவு. அவரது முதல் நாவலான ரப்பர் வெளிவந்ததும் அவசரமாக வாங்குகிற அளவுக்கு அவரது எழுத்தின் மேல் பிரியம் கூடியிருந்தது. ரப்பர், பி.கேசவதேவின் அண்டை வீட்டிற்கு நிகரான நாவல். தமிழுக்கு புதிய வரவு. ஜெயமோகன் என்கையில் அசுரன் என்கிற வார்த்தையை அவரது பல இயக்கங்களுக்கு முன்னொட்டாகச் சேர்க்கலாம். அசுர வாசிப்பு, அசுர நினைவாற்றல், அசுரப் பயணம், அசுர எழுத்து, என்று நிறைய சேர்த்துக் கொள்ளலாம். இதில் மறக்காமல் சேர்க்க வேண்டிய ஒன்று அசுர அன்பு. என்னிடமும் என் எழுத்துக்களிடம் அப்படி ஒரு அன்பு காட்டியவர். அவர் மட்டுமல்ல, அருண்மொழி, அஜிதன் எல்லோரும் எங்கள் குடும்பத்தோடும் என்னோடும் அன்பு காட்டுகிறவர்களாகவே இருக்கிறார்கள். "இப்போது பார்க்கையில் நம்ம  பாரதிக்கு (என் மகள்), அருண்மொழியின் ஜாடை வந்தது போலிருக்கிறதல்லவா’’ என்று நானும் என் மனைவியும் பேசிக் கொள்வோம்.


நான் குற்றாலத்தில் கவிதைப் பட்டறைகளை பிரம்மராஜனுடன் சேர்ந்து நடத்த ஆரம்பித்த பின் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடக்கிற ஒரு மனோபவத்தை வளர்த்துக் கொண்டேன். (சில விரிசல்கள் இருக்கலாம், நிச்சயமாக உரசல்கள் இல்லை) ஏனென்றால் அந்தச் சந்திப்புகளின் மூலமாக எத்தனையோ பேர் எனக்கும், எத்தனையோ பேருக்கு நானும் நெருக்கமானவர்களாக ஆனோம். முதலில் கவிதைக்கு மட்டுமேயான பயிலரங்காக இருந்த கவிதைப்பட்டறை, 1993-இல் ஒரு மாற்று வடிவம் எடுத்தது. கவிதை சிறுகதை நாவல் என்று விரிவான இலக்கியக் கருத்தரங்காக மாற்றம் பெற்றது. அதில்தான் ஜெயமோகன் கலந்து கொண்டார் என்று நினைவு.


அதற்குப் பிறகு பல குற்றாலம் அரங்கிற்கு அவர் வந்திருக்கிறார். இடைகால் வீட்டிற்கு வந்திருக்கிறார். நாங்கள் அவரது பத்மனாபபுரம் வீட்டிற்கு போயிருக்கிறோம். ஒரு ஜனவரி முதல்தேதி கன்னியாகுமரி சுசீந்திரம் எல்லாம் போய்விட்டு மதிய உணவிற்கு, அசாத்தியப் பசியோடு மிகத் தாமதமாக போனோம். பசியோடு போனது நல்லதாய்ப் போயிற்று. அவ்வளவு பிரமாதமாகவும், விதவிதமாகவும் சமைத்து வைத்திருந்தார்கள் இருவரும். 


மலையாள கவிஞர்களுடன் கலாப்ரியா, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், அருண்மொழி நங்கை


என்னுடைய கவிதைகளின் மொத்தத் தொகுதி ஒன்றை தமிழினி வசந்தகுமார் பதிப்பிக்க முன் வந்தார். அதற்கு ஒரு முன்னுரை எழுதும்படி ஜெயமோகனிடம் கேட்டேன். அவர் என் கவிதைகள் குறித்தும் பொதுவாக கவிதையியல் குறித்தும் நாங்கள் சந்திக்கிற போதெல்லாம் விரிவாகப் பேசுவார். ஆனால் அவர், நீங்க ஒரு சீனியர் உங்க கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவது சரியானது இல்லை. நான் உங்கள் கவிதைகள் பற்றிய என் மொத்த மதிப்பீட்டைப் பற்றி ஒரு கட்டுரை போல எழுதுகிறேன் என்றார். அதற்காக என் வீட்டிற்கு வந்து ஒரு பகலும் ஒரு இரவும், மறு நாள் மதியம் வரையிலும் பேசிக் கொண்டிருந்தார். குற்றாலம் தரம்ராஜன் நான் அவர் மூன்று பேரும்  அமர்ந்தபடி, குளத்தோரமாக நடந்தபடி, இரவில் மொட்டை மாடியில்  படுத்துக் கொண்டு என்று சுமார் இருபது மணி நேரமாவது பேசியிருப்போம். என்னுடையவும் பலருடைய பல கவிதைகளையும் நினைவிலிருந்தே எடுத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசியது எல்லாவற்றையும் நினைவில்தான் பொதிந்து கொண்டிருக்கிறார் என்பது அந்தக் கட்டுரையை எழுதிய பின்னரே தெரிந்தது.


என் கவிதைகள் குறித்து தமிழவன் படிகள் இதழில் எழுதிய கட்டுரைக்கு அடுத்து இன்றைக்கும் ஜெயமோகனின் கட்டுரை விரிவும் ஆழமுமான ஒன்று. அந்த நூற்றிச் சொச்சம் பக்கங்களில் அவர் எழுதிய கட்டுரையின் கையெழுத்துப் பிரதியினை வசந்தகுமாரிடம் கேட்டு வாங்கி வைத்திருக்கிறேன். அது என்றில்லை, 1997 என்று நினைவு, குற்றாலம் என் வீட்டில் நடை பெற்ற முதல் தமிழ் - மலையாளக் கவிஞர்களின்  கவிதைக் கூடல் குறித்த அனைத்துக் கடிதங்களையும், மொழி பெயர்ப்புகளையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்குத்தான் எவ்வளவு ஈடுபாட்டோடு கடிதங்கள் எழுதி தகவல் பரிமாறிக் கொள்வோம்! பங்கு பெறுவோரின் தமிழ்க் கவிதைகளை மலையாளத்திலும் மலையாளக் கவிதைகளை தமிழிலும்  கையால் எழுதி Manifold sheet-இல் கார்பனை வைத்துப் பிரதியெடுத்து ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைத்து, அவ்வளவு பேரையும் ஒன்று சேர்த்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து... அதுதான் எனக்குப் பிடித்த ஜெயமோகன். அத்தனை பிரதிகள் எடுக்க எவ்வளவு அழுத்தமான கை தேவை என்று நானும் என் மனைவியும் வியந்து போனோம். அந்த ‘அழுத்தமும்’ பிடிவாதமும்தான் ஜெயமோகன்.


ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, தேவதேவன், நான், யுவன், மனுஷ்யபுத்திரன், ராஜீவன், கல்பற்றா நாராயணன், வீரான் குட்டி, அன்வர், பி..பி.ராமசந்திரன், ராமன் என ஒரு இருபது பேர் ஆத்மார்த்தமாக பங்கெடுத்துக் கொண்டதோடு, தமிழ்க் கவித்துவத்தை மலையாள நண்பர்களிடமும் அவர்களது கவித்துவத்தை எங்கள் மத்தியிலும் ஆழமாக விதைக்க வழி செய்தார். தமிழ்க் கவிதைகளின் பாதிப்போடு சென்றவர்கள் மலையாள இதழ்களில் தங்கள் புதிய கவிதைகளை எழுதியபோது அதை 'இது பைத்தியக்காரத்தனம்' என்றே வர்ணித்தார்கள், 'குற்றாலம் எஃபெக்ட்’ என்ற பதச் சேர்க்கையோடு. அந்த மொழிபெயர்ப்பு எல்லாவற்றையும், தமிழினி, வசந்தகுமார், சமீபத்திய மலையாளக் கவிதைகள் என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்தார். அதை அடுத்த ஆண்டு நடை பெற்ற பதிவுகள் பட்டறையில் வெளியிட்டோம். அந்தப் பட்டறையின் முக்கிய அம்சமே, மலையாள, கன்னட, தமிழ்க் கவிதைகளின் மொழி பெயர்ப்புக் கூடுகைதான். அதற்கும் ஜெயமோகனின் உழைப்பும் பிரயாசையும் சொல்லில் அடங்காதது.


அதைத் தொடர்ந்து ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு கவிக்கூடுகை நடத்தினார். அப்புறம் கன்னியாகுமரியில் யுவன் கவிதைகள் குறித்து ஒரு இரண்டு நாள் அரங்கம், நெடுமுடியில் கல்பற்றா நாராயணன் கவிதைகள் குறித்து இரண்டுநாள் அரங்கம் என்று நான் கலந்து கொண்ட அரங்கங்கள் மன நிறைவானவை.


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக கோவையில் நடைபெற்ற முதல்கூட்டமே என்னுடைய படைப்புகள் பற்றிய கூட்டம்தான். அதுதான் பின்னால் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவாக பரிணாமம் அடைந்தது. என்னுடைய கூட்டம் என்பது ‘சீக்கிரமே போடப்பட்டுவிட்ட தமிழ்நாட்டின் பழைய மீட்டர் கேஜ் ரயில்ப் பாதைகள் போல.’ பரிசுத் தொகையோ, விருதோ, கலகலப்பான உரையாடல்களோ இல்லாதது.  எனக்கு அந்த விருது பற்றியோ விழா பற்றியோ ஒரு ஆவலாதியும் இல்லை. ஏனெனில் ஜெயமோகனின், அவரது குடும்பத்தினரின் அன்பும் நட்பும் அவரது அரசியலை மீறிய பெரிய விருது. அதை நான் ஏற்கெனவே பெற்று விட்டேன்.

***

2 comments:

  1. அன்பெனும் விருது கட்டுரை, வாசகர்களுக்கான நினைவு எனும் விருது. உரைநடை எழுத்து வழி தெரிந்த ஜெயமோகன் அவர்களின் கவிதை முகத்தைக் காட்டுகிறது கட்டுரை. 'அசுரன்' எனும் கலாப்ரியாவின் அடைமொழி சிறப்பு. குற்றாலத்தின் சாரலாக தெறிக்கிறது கவிஞர் அவர்களின் நினைவு. உண்மையில் அகிலாண்ட பாரதி, அருண்மொழி மங்கையின் ஜாடை தான். தான் பெற்ற விருது குறித்த பதிவின் வழியாக வாசகர்களுக்கு புதிய திறப்பு எனும் விருதினை வழங்கும் பதிவு. கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தமிழிலக்கியத்தின் மிகத் தீவிரமான கை ஜெயமோகனுடையது என்பதை அழுத்தமாக நிறுவும் கட்டுரை. நன்றி கலாப்ரியா.

    ReplyDelete

Powered by Blogger.