மயில் கழுத்தின் நீலம் - சுரேஷ்குமார இந்திரஜித்

                 1

ஜெயமோகனும் நானும் எப்போது முதன்முதலாகச் சந்தித்துக்கொண்டோம் என்று அறிய நினைவைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டே சென்றபோது நினைவுகளின் அழிவை உணர்ந்தேன். பாம்பன் விளையில் சு. ரா. கூட்டிய கூட்டத்திலா, மதுரை சதாசிவ நகரில் நான் குடியிருந்த சிறிய வீட்டிலா, மதுரை சிவராமன் வீட்டிலா அல்லது வேறெங்கோவா; ஒன்றும் புலப்படவில்லை. ஆனால், மூன்று நிகழ்வுகள் நினைவில் உள்ளன. அவருடைய மனைவிக்கு அஞ்சல் துறையில் வேலை கிடைத்து மதுரையிலுள்ள பெருங்குடி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார். ஜெயமோகன் மனைவியைச் சந்திக்க அவ்வப்போது வருவார். ஒருநாள் இருவரையும் சந்திக்க நான், என் மனைவி, மகள்கள் ‘இந்திரஜித்’ என்ற பெயர் தரித்த ஆட்டோவில் சென்றோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து தூரமான இடத்தில் இருந்தது பயிற்சி நிலையம். சென்றோம். அவர்கள் வெளியே சென்றிருந்தார்கள். காத்திருந்து பார்த்து ஆட்டோவில் திரும்பினோம். நீண்ட தூர ஆட்டோ சவாரி மகள்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


குற்றாலத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தார். இப்போது நினைவில் அவர் உருவம் தெளிவாகத் தெரிகிறது. வேட்டியோ லுங்கியோ மடித்துக் கட்டி கழுத்தில் துண்டை மாலையாக அணிந்து பேசிக்கொண்டிருந்தார். சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பதுபோல் சிலர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நெடுஞ்சாலைத்துறை டிராவலர்ஸ் பங்களாவில் ஓர் அறையைப் பெற்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு கவிஞர் பிரமிள் வந்திருந்தார். எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு பழைய லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அறையில் துர்நாற்றம். மெத்தை கறைகளுடன் இருந்தது. எனக்குப் பதட்டமாக இருந்தது. அறையைக் காலி செய்து என்னுடன் தங்கிக்கொள்ள அழைத்து வந்துவிட்டேன். இரண்டு கட்டில்கள் தனித்தனியே உள்ள ஒரே அறை அது. நடுவில் டீப்பாய். காற்றோட்டமான வெளிச்சமான அறை. அவர் முகத்தில் தெளிவைக் கண்டேன். ‘அஸ்வமேதா’ பத்திரிகையில் பிரமிள் பற்றிய ஒரு கட்டுரையை எம். டி. எம். எழுதியிருந்தார். அக்கட்டுரை மீது சினம் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தில் அவருடன் சண்டை போடக் காத்திருந்தார். அச்சந்தர்ப்பம் வந்ததும் ஆங்கிலத்தில் ஏதோ உரக்கப் பேசி சண்டைக்கு இழுத்தார். சண்டையும் போட்டார். பிரம்மராஜன் கூட்டத்தைக் கலைத்துவிட்டார். அந்தக் கூட்டத்தில் ஜெயமோகன் இருந்தாரா என்று தெரியவில்லை. என்னிடம் அறைச்சாவி வாங்கிக்கொண்டு பிரமிள் அருவிக்குச் சென்றுவிட்டார்.


பின்னர், பிரமிளும் நானும் அறைக்குத் திரும்பி பேசிக்கொண்டிருந்தோம். ஜெயமோகனும் அவருடன் இருவரும் வந்தார்கள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. “சச்சிதானந்தன் எழுதிய ‘மார்க்ஸிய அழகியல்’ படித்திருக்கிறீர்களா” என்று பிரமிளிடம் ஜெயமோகன் கேட்டார். “அழகியல் என்று சொல்லுங்கள் அதென்ன மார்க்ஸிய அழகியல். மயிர்ல மார்க்ஸிய மயிர்னு இருக்கா” என்றார் பிரமிள். வாக்குவாதம் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்து பேச்சை மாற்றினேன். சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஜெயமோகன் சென்றுவிட்டார்.


மதுரை சிவராமன் வீட்டில் சிலருடன் சு. ரா. கூட்டம் கூட்டியிருந்தார். மனுஷ்யபுத்திரன் வந்தார். ஜெயமோகன் வந்தார். வேறு நபர்கள் நினைவில்லை. நான் அப்போது போக்கிரிக் குணங்களுடைய மனிதனாக பாவலா காட்டிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் லட்சியவாதி போல் தெரிந்தார். பின்நவீனத்துவ, உணர்ச்சிகளற்ற, வர்ணனை குறைவான கதைகளின் மீது நாட்டம் குறைவாக இருந்தவர் போல் தோன்றினார்.


சிவராமன் வீட்டில் சு. ரா. தங்கியிருந்தார். என்னுடைய கதைத் தொகுப்பு ‘மறைந்து திரியும் கிழவன்’ ஏற்கெனவே வந்திருந்தது. சு. ரா. மதுரைக்கு வந்தால் சிவராமன் வீட்டில் தங்குவார். பின்னாளில் ஓட்டல்களில் தங்கினார். சிவராமன் வீட்டில் இருந்தபோது எனக்கும் அவருக்குமிடையே நடந்த பேச்சில் ‘காலச்சுவடு’ இதழில் ஜெயமோகனின் ‘பத்ம வியூகம்’ கதை பிரசுரமாகியிருந்தது பற்றிப் பேச்சு வந்தது. அக்கதை பற்றி, குறிப்பாக கதையில் அடுத்த ஜென்மம் வருவது தொடர்பாக சந்தேகங்கள் கேட்டுக்கொண்டிருந்தேன். “ஜென்மம் ஜென்மமாகத் தொடருவதில் கதை நகர்ந்துகொண்டிருக்கிறது. இதைப் பார்க்க பகுத்தறிவு தேவையில்லை. இது மரபு சார்ந்த கதை. கிருஷ்ணனும் திரௌபதியும் சற்று விமர்சனத்திற்குரியவர்களாக, நிழல் விழுந்த பாத்திரங்களாக இருக்கிறார்கள்” என்றார். அக்கதை அவருக்குப் பிடித்திருந்தது. சுபத்திரையின் ஆவலையும் பதைபதைப்பையும் அவர் நன்றாகச் சித்தரித்திருந்ததாக நினைத்திருந்தேன். பிரசுரமான ஆண்டு 1997. அதற்குச் சற்று பின்னர் இந்த உரையாடல் நிகழ்ந்திருக்கும்.


நான் சொன்னேன். “எனக்கு மரபு தெரியாது. சொற்பமாக ஏதாவது அறிந்திருப்பேன். சிறுபத்திரிகை உலகம் மரபின் இடத்தை வகிக்கிறது. உங்களுக்கும் இந்திய மரபில் பெரிய நெருக்கம், அட்டாச்மெண்ட் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்திய மரபிலிருந்து ஒரு எழுத்தாளர் வந்திருக்கிறார்” என்றேன். “ஜெயமோகன்” என்றார். “ஆமாம்” என்றேன். “அவர் காவிய மரபுன்னு தோன்றது” என்றார்.


“அவர் படைப்பாளி. ஆனால், அவரைப் படிப்பவர்கள் பழமையை நோக்கிச் செல்லும் வாய்ப்பு ஏற்படுமா” என்றேன்.


அவர் பதில் சொல்லவில்லை. ‘தெரியவில்லை’ என்ற பாவனையில் கையை அசைத்துவிட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தார்.


சு. ரா.விற்கும் ஜெயமோகனுக்கும் தத்துவார்த்தமாக நெருக்கம் ஏற்படவில்லை என்றும் நவீனப் படைப்புகள் பற்றி ஒற்றுமையான அபிப்ராயங்கள் ஏற்படவில்லை என்றும் சரியாகவோ தவறாகவோ நான் நினைத்தேன். இருவருக்கும் இடையே விலக்கம் ஏற்பட்டுவிட்டதைக் கண்டேன். சு. ரா. வழக்கம்போல் மௌனம் காத்தார். எனக்குத் தெரிந்து சுஜாதாவிடமும் அசோகமித்திரனிடமும் மட்டும்தான் அவர் மோதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.


இந்திய மரபு, இந்து மெய்யியல், மதப் பிடிப்பு, மார்க்ஸியப் பிடிப்பு ஆகியவற்றை இணைக்க கற்பனை உள்ளம் கொண்டிருந்த நல்ல மனிதராக கோவை ஞானி இருந்தார். மரபார்ந்த நவீன இலக்கியங்கள் மீது அவருக்கு நாட்டமிருந்தது. ஜெயமோகனுக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஜெயமோகன் ஒரு காலத்தில் படைப்புலகில் அடையப்போகும் பிரதான இடத்தை அவர் கணித்திருந்தார் என்றே நினைக்கிறேன். ஜெயமோகனின் ‘படுகை’ கதையை அவர் பிரசுரித்தார்.


விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ஒருநாள் முழுக்க இரவு நெடுநேரம் படித்தேன். சரியாக என்னால் கணிக்க இயலவில்லை. வர்ஷா விஜயகுமார் அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றுவிட்டார்.

கோவையில் கூட்டம் நடந்தது. எஸ். ராமகிருஷ்ணன் விஷ்ணுபுரத்தைத் தாக்கிப் பேசினார். சி. மோகன், ரமேஷ் பிரேதன் நாவலின் மீது அபிமானமுடையவர்களாக இருந்தார்கள். தனிப்பேச்சில் பிறரிடமிருந்து தெரிந்துகொண்ட அபிப்பிராயங்களைக் கூறியதன்றி, சு. ரா. அந்நாவலைப் பற்றி அபிப்பிராயம் ஏதும் கூறியதாக எனக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் அவர் பேசவில்லை என்று நினைக்கிறேன். இப்படி இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இன்று ஜெயமோகன் ஒரு நிலையை அடைந்துள்ளார். இவை அனைத்துமே அவர் படைப்புகள் சார்ந்த விஷயம்.


அனைத்து விஷயங்கள் பற்றியும் அவருக்குக் கருத்து உண்டு. அதைப் பற்றி எழுத என்னால் ஏலாது. தவிர அந்தக் கருத்துலகம் பிரம்மாண்டமான நிலப்பரப்பு. சர்ச்சைக்குரியது. நான் வேற்று ஆளும்கூட.


விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது, மனைவியுடன் 


2

இந்தக் கட்டுரையில் ஜெயமோகனின் ஒரு கதையை எடுத்து எழுதலாம் என்று நினைத்தபோது, ‘படையல்’ என்ற கதைதான் மேல் எழுந்து வந்தது. இன்றைய சூழ்நிலையில் இந்திய சமூகத்தில் மதம் வகிக்கும் நிலை; மதத்தின் மீது புதிய கோணத்தில் ஏற்பட்ட பற்று; காந்திஜியின் இந்து, முஸ்லிம் சமரசப் பண்பு; பழமையிலிருந்து மீண்ட மனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் சூழ்நிலை; இந்திய நிலப்பரப்பில் ஏற்பட்ட படை மோதல்கள்; மக்களின் துயரம்; இரக்கமற்ற கொலைக்களனாக நிலப்பரப்பு மாறியது பற்றி; மதராசும் பாண்டிச்சேரியும் புகலிடமாக மாறியது பற்றி; இன்றைய மத ஆவேசம், பிற மத வெறுப்பு பற்றி; எறும்பு பாவா என்னும் எலிக்கண்களுடைய சிறுவனின் உருவம் கொண்ட பச்சைத் தலைப்பாகை கட்டிய முஸ்லிம் பெரியவர்; அவரைக் காப்பாற்றும் ஆணைப்பிள்ளைச்சாமி மற்றும் இரு இஸ்லாமியர்கள்; மனித ரத்தத்தினால் ஊறிய அரிசிக்கட்டியைத் தவிர வேறெதுவும் உண்ண முடியாத நிலை; எறும்பு பாவா பேசும் ஒரே வார்த்தை “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”; ரத்த அரிசிக்கட்டியை சமைக்கத் தயங்கும்போது பாவா கூறுகிறார் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”.


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

(திருமூலர்)


பார்முதல் பூதம் = நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ. வேறு உரை தேவையில்லை. இக்கதை பற்றி எழுதுவதில் எனக்கு வலி உள்ளது; அலுப்பு உள்ளது; துயரம் உள்ளது; பிறிதொரு நேரத்தில் எழுதலாம். “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”



நாஞ்சில்நாடன், தேவதேவன், தெளிவத்தை ஜோசெப், சுரேஷ்குமார இந்திரஜித், ஜெயமோகன், 2013 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழா 


3

‘அறம்’ தொகுப்பில் எவ்வளவோ கதைகள் இருக்க எனக்கு ஒரு திறப்பைத் தந்தது ‘மயில் கழுத்து’ என்ற கதை. போதங்களும் மனிதாபிமானங்களும் அற உணர்வுகளும் உள்ள கதைகளின் ஊடே அதிலிருந்து விலகி நிற்கிறது இந்தக் கதை. விசித்திரமான கலவை மனங்கொண்ட எனக்கு இந்தக் கதை தனித்துத் தெரிந்தது. இக்கதையில் சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், மதுரை மணி அய்யர், ஒரு நடனமங்கை ஆகியோர் வருகிறார்கள். புனைவான கதை. கதையில் வரும் பாலு என்ற பால சுப்பிரமணியன், சு. ரா.வின் பதிப்பு; ராமன் தி. ஜா.வின் பதிப்பு; சுப்பு அய்யர், மதுரை மணி அய்யர் மற்றும் மரப்பசு நாவலில் வரும் கோபாலியின் பதிப்பு; சந்திரா, (நடனமங்கை) யாரென்று தெரியவில்லை.


சுப்பு அய்யர் கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வதற்காக மிராசுதாரின் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காகவும் கச்சேரி கேட்பதற்காகவும் பாலுவும் ராமனும் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். சுப்பு அய்யர் நடுக்கூடத்தில் பாயில் உட்கார்ந்திருக்கிறார்.


பாலுவை (சு. ரா.) சுப்பு அய்யரிடம் ராமன் (தி. ஜா.) அறிமுகப்படுத்துகிறார். “பாக்கத்தான் இப்படி இருக்கார். பிளேடு மாதிரி ஆளு. நேக்கெல்லாம் இவரப் பாக்கறச்சே வயத்துக்குள்ளே சில்லுனு இருக்கும். கிழிச்சுடுவார்.”


நடனமங்கை சந்திரா வருகிறாள். ‘பொன்மூங்கில் போல இறுக்கமான உடம்பு. நீளமான மெல்லிய கழுத்தில் பச்சை நரம்புகள் ஓடின. அழுத்தமான உதடுகள். பெரிய கண்கள். தலைமுடியை இரு நெற்றியோரங்களையும் மறைப்பது போலச் சீவித் தளர்வாக பின்பக்கம் கட்டிவிட்டிருந்தாள்.’


கச்சேரி ஆரம்பமாகப்போகிறது. சந்திரா புடவை சரசரக்க வந்து பாலுவின் அருகே அமர்கிறாள். நீலக்கலரில் புடவை. ஆகாய நீலம். ‘சந்திரா கழுத்தைத் திருப்பியபோது பாலசுப்ரமணியன் தன் நெஞ்சில் ஒரு கன்றுக்குட்டி உதையை உணர்ந்தார். அத்தனை நளினமாக ஒரு பெண் கழுத்தைத் திருப்ப முடியுமா என்ன? ஓர் அசைவு ஒரு மாபெரும் கலை நிகழ்வாக ஆகமுடியுமா என்ன? எப்படி அதை வார்த்தையாக்குவது?’


சுப்பு அய்யர் ‘அலர்ஸர பரிதாபம்’ பாட்டைப் பாடுகிறார். பரவசத்தில் ராமன் மூர்ச்சையாகிவிடுகிறார். அவரைத் தனியாகக் கொண்டுபோய் மூர்ச்சை தெளியவைக்கிறார்கள். “இப்ப அண்ணா சொல்லிட்டார். என்ன சொன்னார்னு என்னால சொல்ல முடியலை. ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? இந்த வெஷம் ஏறி எரியறதனாலேதானே என் வெரல்நுனியெல்லாம் சங்கீதமா அதிருது… என் மனசிலே இந்த வேதனையெல்லாம் சங்கீதம்தானே? ஒளறிண்டிருக்கேனா? சொல்ல முடியல பாலு. நான் இதுநாள் வரை சொல்லமுடியலேன்னுதான் சொல்லிண்டே இருக்கேன். அதான் என்னோட எழுத்து. முடியல பாலு… நெஞ்சு முட்டுது. வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு. என்னை குளுந்து போக விடாதீங்க. என்னை பற்றி எரிய விடுங்க.” சட்டென்று முஷ்டியால் தன் மார்பை அறைந்தார் ராமன். “எரியறது…எரியறது” என்றார்.


சுப்பு அய்யரின் குரல் பற்றி: “அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும் முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?”


- இதுதான் கதை. அதாவது கதையின் சில தருணங்களைத் தந்துள்ளேன். வித்தியாசமான, குழறுவது போலப் பாடும் சங்கீதப் பாடகர். பிளேடு போன்ற ஓர் எழுத்தாளர். பொன் மூங்கில் போல இறுக்கமான உடல் கொண்ட ஓர் அழகி. சங்கீதத்தையும் அழகிகளையும் நெஞ்சில் வைத்து எரிந்துகொண்டிருக்கும் ஓர் எழுத்தாளர். இவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கதையாக உருவாகியுள்ளது. வசீகரமான கதை. ‘அலர்ஸர பரிதாபம்’ என்ற சுருட்டி ராகப் பாடலை இங்கு தமிழ்நாட்டில் யாரும் பாடி நான் கேட்டதில்லை. ஆனால், கேரளத்தில் பிரபலம்.


இந்த வசீகரக் கதை நான் எழுதிக்கொண்டிருந்த பாணியை மாற்றும் திறப்பை எனக்குக் கொடுத்தது. இக்கதை பிப்ரவரி மாதம் 2011ல் பிரசுரமாகியுள்ளது. 2011-2012ஆம் ஆண்டில் நான் 12 கதைகள் எழுதினேன். ‘நானும் ஒருவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக அது வெளிவந்தது. அக்கதைகளுக்கு ‘மயில் கழுத்து’ கதை ஆதர்சமாக இருந்தது. அந்த 12 கதைகளுக்கும் ‘மயில் கழுத்து’ கதைக்கும் தொடர்பில்லையே என்று கேட்கக் கூடாது. என் வழக்கமான பாணி இக்கதைகளில் இல்லாதிருந்ததால், அல்லது குறைந்திருந்ததால், உங்கள் கதை மாதிரி இல்லையே என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்.


ஜெயமோகன் வற்றாது படைப்புகளைத் தந்துகொண்டிருக்கிறார். தினம் ஒரு கதை என நூறு கதைகள் எழுதியது ஆச்சரியமானது. வித்தியாசமான களங்கள், செய்திறன் அக்கதைகளில் ஒளியைத் தருகின்றன. பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன.


ஜெயமோகனுக்கு 60 வயது நிறைவடையவுள்ளது. அவரிடமிருந்து வெளிவர படைப்புகள் காத்திருக்கின்றன. என் வாழ்த்துகள்.

***

1 comment:

  1. பிரமிள், சு. ரா.... என பயணித்த சுரேஷ்குமார் இந்திரஜித்தின் பயண தடத்தில் ஜெய மோகன் அவர்களின் முகம் காட்சி பெறும் தருணங்கள் அற்புதம். பல்வேறு இலக்கியவாதிகளின் பதிவுகள் வழியாக ஜெயமோகன் அவர்களின் புதுப் புது நிறங்கள் வெளிப் படுகின்றன. சிறப்பு.

    ReplyDelete

Powered by Blogger.