குரல்களின் நுண் அரசியலும் ஜெயமோகனும் – அமிர்தம் சூர்யா


சமூக நீதிக்கு எதிரான விளிம்பு நிலைக்கு விரோதமான எழுத்தாளர் ஜெயமோகனை நீங்கள்  கொண்டாடுவதன் அரசியல் என்ன? என்று நேரிடையாக ஒரு ஜூம் மீட்டிங்கில் ஒருவர் கேட்டார்.

நான் உண்மையிலேயே இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை .அதை விட முக்கியம் இந்த கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. அதை விட முக்கியம் இந்த குற்றச்சாட்டின் சாரம்சத்தில் ஜெயமோகனை நான் அவதானிக்கவே இல்லை.எனக்கு அவர் படைப்பாற்றல் வழியாகவே வந்தடைந்தார்.படைப்பின் மூலமே என்னைப் பிரமிக்க வைத்தார் எழுத்து தான் என்னை வசீகரித்தது தேடலைத் தொடங்கியது புதிய வாசலைத் திறந்தது. எழுத்தின் அரசியல் பற்றி எனக்குப் பெரிய புரிதல் இல்லை. ஏனெனில் நான் விமர்சகன் இல்லை. களப்பணியாளன் இல்லை. கருத்தியல் போராளி இல்லை. நான் எழுத்தாளன் கவிஞன் மட்டுமே. படைப்பின் திறப்புகளை இனம் கண்டு அதனுள் எனக்கு அகப்படும் தரிசனத்தை உள்வாங்கி சக நண்பர்களுக்கு கைகாட்டிமரம் போல் கடந்து போகிறவன். 95 களிலிருந்து ஜெயமோகன் எனக்கு பழக்கம். விஷ்ணுபுரத்தில் எல்லோரும் என்னென்னவோ அரசியல் பேசினாலோ எனக்கு ஒரு இனக்குழுவில் சிறு தெய்வம் எப்படி தோன்றுகிறது எப்படி நிலைக்கிறது பின் எப்படி தொன்மமாக மாறுகிறது என்பதை பின் தொடர்ந்து சிலாகித்து இருக்கிறேன். 

ஜெயமோகன் ஒரு சிறுகதையில் தன் கருத்திலிருந்து  சற்றும் மாறாத பின் வாங்காத ஒரு அரசனை கேள்வி கேட்டு திமிராக நிற்கும் கருத்தியல்வாதிக்கு தண்டனையாக அரசபையில் அவன் மீது நெய் ஊற்றி எரிக்கும் போது ஜெயமோகனின் ஒரு வரி ..நெய் எரிக்கவில்லை அவன் அறிவுதான் அவனை எரித்தது என்று வரும். இது அந்த சிறுகதைக்கானது மட்டுமா? இல்லையே விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை கொடுத்த பலர் இப்படிதான் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .அவர்களின் அறிவு தான் அவர்கள் இறக்க காரணமாகி இருக்கிறது. இந்த தேசம் இந்த ஆட்சி முட்டாள்களின் கைப்பாவை என்பது தானே அதன் உட்பொருள் இப்படியேல்லாம் அவர்களிடம் நான் விளக்கம் சொல்ல இயலாது எனவே அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னால் நேரிடையாக பதில் சொல்லாமல் கீழ்க்கண்டவாறு சொன்னேன்.

ஜெயமோகன் சமூக நீதிக்கு எதிரானவர் என்றால் சமூக நீதிக்காகவே போராடும் தலைவன் திரு தொல் திருமாவளவன்  நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏன் ஜெயமோகனை முக்கியத்துவம் கொடுத்து அழைத்தார். எல்லோரையும் அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிக்க மறுக்கும் ஜெயமோகன் , திருமாவளவனைப் புகழ என்ன காரணம்? சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் ஏன் ஜெயமோகன் எழுதிய வெள்ளை யானை நாவலுக்கு பின் கொண்டாட ஆரம்பித்தார். அவர்களுக்கெல்லாம் தெரியாத உணராத அக்கறையா உங்களுக்கு வந்து விட்டது..முதலில் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டு விட்டு பிறகு என்னிடம் கேளுங்கள் இலையிடம் விசாரணை எதற்கு வேரிடம் விவாதி என்பதாகப் பதில் சொன்னேன். ஒரு வகையில் கிரேட் எஸ்கேப்பிசம் தான். இப்படியான விவாதங்கள் படைப்பாற்றலை மழுங்கடித்து விடும் என்று நம்புபவன் நான். ஒருவேளை இது மூட நமபிகையாக கூட இருக்கலாம்.

மதுரை இறையியல் கல்லூரியிலேயே தலித் இலக்கியம் , அயோத்திதாசர் பற்றி   இதுவரை ஐந்து முறை ஜெயமோகன்  உரையாற்றியிருக்கிறார். முதல் உரை 2010 ல் நண்பர். வே.அலெக்ஸ் ஏற்பாடு செய்தது. பிப்ரவரி 2019ல்  தொல்.திருமா அவர்களுடன்தான் கலந்து கொண்டு அயோத்தி தாசர் பற்றிப் பேசினார் 

தலித் மக்கள் தாக்கப்பட்ட போது 27-4-2019 நடந்த கண்டன கூட்டத்தில் தொல்திருமாவளனுடன் ஜெயமோகன் பேசியிருந்தார்.

இந்த தொடர் செயல்பாடுகள் ஏன் உங்கள் நினைவிலிருந்து அகன்று மறைந்து போகிறது ?  இம்மாதிரி கேள்வி எழுப்புபவர்கள் ஆழ்மன தலித் ஒவ்வாமை கொண்ட தலித் அல்லாதவராகவே இருக்கிறார்கள் என்பது என் புரிதல்.


சிவகாசியில் ஒரு நூல் வெளியீட்டுக் கூட்டத்துக்கு நானும் பேச்சாளர் பர்வீன் சுல்தானாவும் ஒரே ரயில் ஒரே பெட்டியில் எதிர் எதிர் இருக்கையில் பயணம். முழுக்க முழுக்க இலக்கியம் குறித்தான பேச்சு தான். கடைசியில் அது ஜெயமோகனிடம் வந்து நின்றது. நான் பர்வீன் சுல்தானா வாசிக்க மறந்த ஜெயமோகனின் டார்த்தீனியம் குறுநாவல் பற்றி பவா செல்லத்துரையாக மாறி அதைக் கதையாகச் சொல்லச் சொல்ல அந்த கதையைப் படிக்காத பர்வீன் சுல்தானாவின் கண்கள் விரிந்தன ஆச்சரியத்தில். நான் சொன்னேன் என்ன பர்வீன் கொற்றவை கண் போல் ஆச்சரியத்தில் உருட்டுகிறாய் என்றேன். பேச்சு கொற்றவை பற்றி நகர்ந்தது…(பர்வீன் சுல்தான் தொழுகை நோன்பு மெக்கா பயணம் என ஒரு  மரபு மாறாத இஸ்லாமியர் …என்பதை நினைவூட்டித் தொடர்கிறேன்) பர்வீன் சொன்னார்..

“சூர்யா நான் குடும்பத்துடன் மெக்கா போனேன்.மெக்கா போகும் போதே ஜெயமோகனின் கொற்றவை வாசிக்க ஆரம்பித்தேன் அந்த எழுத்தில் அந்த எழுத்து உருவாக்கிய காட்சியில் அப்படியே நான் கரைந்து அங்கேயே அந்த பிரதி உருவாக்கிய நிலத்திலேயே வாழத்தொடங்கினேன். முக்கால் வாசி படித்தபோது மெக்கா வந்தடைந்தோம். எல்லோரும் பரபரப்பானார்கள் மெக்கா செல்ல. இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது. நான் இந்த கொற்றவையை முடித்து விட்டுத் தான் மெக்கா வருவேன். வேண்டுமானால் நீங்கள் போய் வாருங்கள். என்று நான் கொற்றவையை வாசித்து முடித்த பின்பே மெக்கா வழிபாட்டுக்குப் போனேன். அவர் இந்துத்துவாவா பாசிச குருப்பா அவர் அரசியல் ஏதும் எனக்கு வேண்டாம். எனக்கு அந்த எழுத்து போதும் அந்த கொற்றவை என்னுள் குந்திக்கொண்டாள் என்று முடித்தார்.

உன்னைப் போலவேதான் நானும் பர்வீன் என்றேன்  , டார்த்தீனியம் நாத்திகத்தை விமர்சிக்கும் நாவல் என்றும் டார்த்தீனியம் கறுப்பின மக்களின் குறியீடு என்றும் அவரவர் கருத்தியலுக்கு ஏற்ப சார்ந்திருக்கும் அரசியலுக்கேற்ப எப்படியெல்லாம் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் …என்று சொல்லி முடிக்கும் போதே , இல்லை சூர்யா வீட்டுக்கு வந்த அந்த கருப்பு விதை ஏன் இன்றைய வாசிப்புக்கு இக்கால  செல்போனில் குறியீடாக இருக்கக் கூடாது. இந்த காலத்துக்கு அதானே பொருந்தும் என்றார். அது உங்கள் வாசிப்பனுபவம் ஒரு பிரதி மீது நீங்கள் பொருத்திப் பார்க்கும் புரிதல் . ஜெயமோகனை கருத்தியல் ரீதியாக எதிர்க்கும் இயக்குனர் என் நண்பர்  வ.கீதா , டார்த்தீனியத்தை சினிமாவாக எடுக்க மிகவும் ஆசைப்பட்டு ஸ்கிரிட் எழுதி பார்க்க துணிந்தேன்ன்னு என்னிடம் சொல்லி இருக்கிறார் ஆக இந்த இடத்தில் அதாவது நம் கீதா இடத்தில் படைப்பு தானே மேலெழும்பி நிற்கிறது இம்மாதிரியான படைப்பாக உரையாடல் மட்டுமே எனக்கான பாதை என்றேன்.

பரவலான கவனத்தைப் பெற்று வரும் இளைய எழுத்தாளர் அகரமுதல்வன் போன்றோர் ஜெயமோகனுடன் ஒத்திசைந்து கைகோர்த்துப் பயணிக்கும் போது அவர் மீது விமர்சனம் வைக்காமல் நாசூக்காக நகர்ந்து கொள்பவர் என் போன்றோரிடம் மட்டுமே இம்மாதிரியான வாதத்தை வாள் வீசுவர். அதன் அருப பின்புலம் சாதியம் அல்லாது வேறொன்றுமில்லை..

முதல் பாராவில் குறிப்பிட்ட ஜூம் நிகழ்வுக்குப் பின் சென்னை பெரம்பூரில் வசிக்கும் திறனாய்வாளர் எழுத்தாளர் வே. எழிலரசுவை அவரது வீட்டில் சந்திக்க போயிருந்தேன்.அவர் திமுக ஆதரவாளர் . ஆனால் ஜெயமோகனின் எழுத்தை நுட்பமாக வாசித்து பலம் பலவீனம் ஜெயமோகனின் உள் அரசியல் என்றெல்லாம் பேசக் கூடியவர். அவர் பேசும் போது சொன்னார்.. ..

திராவிட சிந்தனையாளர்கள் அரசியல்வாதிகள் , பெரியார் தான் திராவிடத்தின் முதல் சிந்தனையாளர் என்கிறார்கள்.ஆனால் ஜெயமோகன் பேச்சின் சாரம் இல்லையில்லை பெரியார் இல்லை அயோத்திதாசர் என்ற தலித் தான்  முதல் சிந்தனையாளர் என்பது. இதன் மூலம் பெரியாரை கீழ் இறக்கி விடுகிறார் இதை நுட்பமாகப் புரிந்து கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்

இந்தியாவின் முதல் தொழிலாளர் போராட்டமே திருவிக நடத்தியது என்று தான் எல்லா திராவிடர்களும் வரலாறு எழுதிவிட்ட தருணத்தில் , இல்லை முதல் தொழிலாளர் போராட்டத்தை நடத்தியவர் அயோத்திதாசர் தான் என்று முன் மொழிய வெள்ளையானை நாவலை எழுதுகிறார். ஏன் திருவிகவை ஆவணமாக்கியவர்கள் அயோத்திதாசரை இருட்டடிப்பு செய்தனர். காரணம் சாதியம் அல்லாது வேறென்ன?

விஷ்ணுபுரம் விருது விழாவில் அமிர்தம் சூர்யா

எம்.சி ராஜா வை யாரும் கண்டுகொள்ளாத போது தலித் அல்லாத எழுத்தாளர் ஜெயமோகன் தான் ஒரு பெரிய கட்டுரையை எம்.சி.ராஜா வை பற்றி எழுதுகிறார். இம்மாதிரியான  ஜெயமோகனின் செயல்பாட்டுக்காகத் தான் திருமாவளவன் ஆதரிக்கிறார். என்று நான் நம்புகிறேன் என்பதாக அவரின் பேச்சு ஓடியது.
ஆக .. என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா என்று அதிர்ச்சியாகி கேட்கும் அதிகம் வாசிக்காத,நுண் அரசியல் தெரியாத, படைப்பின் அரசியல் புரியாத  தேங்கிப்போன சிலரின் சொல் சிலம்பமாகவே இன்றைய விமர்சன சூழல் இருக்கிறது என்பதாக நான் விளங்கிக் கொண்டேன்.

முன் எப்போதும் போல் இல்லாத அளவு உக்கிரமான சாதியாலும் மதத்தாலும் கெட்டி தட்டிப் போன சூழலில் குழு அரசியலின் இறுக்கத்தில்  சகபடைப்பாளிகளை கொண்டாடும் மனநலம் குறைந்து வரும் காலத்தில் அதிலிருந்து மீண்டெழுவதும் மீட்டெடுப்பதும் கூட ஒரு படைப்பாளியின் பணியாயிருப்பதால் இந்த அழகிய தருணத்தில் ஜெயமோகன் என்ற தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளனை நிபந்தனையின்றி கொண்டாடுகிறேன். வாழ்த்துகிறேன். இது  கட்டுரைக்கான குறிப்புக்கள் தான். இதில் பல தரப்பு குரல்கள் நுண் அரசியலோடு பதிவாகியுள்ளன எனவே தான்  குரல்களின் நுண் அரசியல் என்று பெயரிட்டேன்.

***

1 comment:

  1. கிட்டத்தட்ட 2005வரை நான் ஊன்றிகவனித்ததில் தஞ்சாவூர்நாராயணன் அதாவது தஞ்சைபிரகாஷ் அவர்களின் தோழர்.நடத்திய
    இலக்கியவட்டம் கூட்டத்தில்தான் தலித் என்றால்
    என்ன என வாதப்பிரதிவாதங்கள்..அந்தவாசகமே மும்பை இலக்கியத்திலிருந்து இறக்குமதிஆனசொல் என்ற
    உண்மையை நான்தெரிந்துகொண்டேன்.தவிர தொடர்ந்த வேறு புத்தகமதிப்பீடு சார்ந்த
    அதுமாதிரியான நிகழ்வுகளில்
    ஜெயமோகன் அவர்களின்
    படைப்பு என்னால் விமர்சிக்கப்பட்டது.எனது நடுநிலைதவறாத திறனாய்வைக்கண்டு நீங்கள்
    என்ன இடதுசாரியா என அவர்
    வினவினார்.ஆமாம்தமுஎச செயற்குழுஉறுப்பினர் என்றேன்.தீர்க்கமாக நினைவு
    இவ்வளவுதான் இருக்கிறது.நான்சொல்லவந்ததே அதிலிருந்து எங்குநடக்கும்
    கூட்டத்திலும் காதுசெவிபடும்
    சாதியக்கலப்பான இதுவோ
    அதுவோ படைப்புகளில் இனிப்புசரிகைத்தாளாக ஒட்டிக்கொண்டு இன்றுவரைபடாதபாடுபடுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.