திசை நிறைத்து எழுந்துயர்ந்த பேருருவம் - வேணு தயாநிதி

வேணு தயாநிதி, ஜெயமோகன், ராஜன் சோமசுந்தரம்

பாலமித்ரா, அம்புலிமாமா பொன்னி லயன் காமிக்ஸ்சுகள் பஞ்சதந்திரக்கதைகள், தெனாலிராமன், ஈசாப், நீதிக்கதைகள் என “கதைப்புத்தகங்கள்” வாசிக்க ஆரம்பித்து வாண்டுமாமா, துமிலன், ஆலந்தூர் கோ.மோகனரங்கன். பிறகு வீட்டில் அக்காவின் சேகரிப்பில் இருந்த லஷ்மி, அநுத்தமா, சிவசங்கரி, ரமணிச்சந்திரன், இந்துமதி, ராணி, தேவி வார இதழ்கள், ராணிமுத்துவின் மாத நாவல்கள் வாசித்து கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், பி.வி.ஆர், வரை வந்தேன். பிறகு ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் நாவல்கள். இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்வாணன் சங்கர்லால் துப்பறியும் நாவல்களுக்குபின். ‘துப்பறியும் கலையில் வல்லவராவது எப்படி?’ படித்துவிட்டு, துப்பறியும் கலையில் எப்படித்தான் வல்லவராவது? என்று யோசித்துக்கொண்டிருந்த காலம். சலித்துப்போய் ஆவியுலகம் பற்றிய புத்தகங்களுக்கு பிறகு ‘பூமிக்கு வந்த வானமண்டல மனிதர்கள்’ வாசித்து அதை வானொலியில் ஒலிச்சித்திரமாக்கும் என் விருப்பத்தை விக்கிரவாண்டி ரவிச்சந்திரனுக்கு எழுத அவர் அனுமதி தெரிவித்து பதில் எழுதியதுடன் “விழுப்புரம் பகுதியில் கோவை வானொலி எடுக்காது. ஆகவே, நிகழ்ச்சியை தயவு செய்து கேசட்டில் பதிவு செய்து அனுப்ப முடியுமா?” என்றும் கேட்டிருந்தார். பள்ளி மாணவன் என்ற விஷயத்தை அவருக்கு எழுதிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருக்கவில்லை.  


விடுமுறையில், ‘கராத்தே கற்றுக்கொள்ளுங்கள் (105 விளக்கப்படங்களுடன்)’, ‘ஹிப்னாடிசம்’, ‘மெஸ்மரிசம்’ முதல் உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை நூல்கள், ‘வனவாசம்’, ‘வர்மக்கலை’ ஆகியவற்றுக்கிடையே தற்செயலாக ‘மோகமுள்’ என்ற ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. அது பிடித்துப்போய ‘தி.ஜா.வின் சிறுகதைகள்’. ‘செம்பருத்தி’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை வாசித்து முடித்தேன். லா.ச.ராவின் ‘புற்று’ சிறுகதை தொகுப்பை அடுத்து அவரின் சிறுகதை தொகுப்புகள், நாவல்கள். கி.ராஜநாராயணனின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’, ‘கரிசல்கதைகள்’ ஆகியவற்றை வாசித்தேன். கோவை வானொலியில் ‘கோபல்ல கிராமம்’ சூலூர் கணேஷின் குரலில் ஒலிச்சித்திரமாக வந்துகொண்டிருந்தது.


பள்ளிப்பாடங்கள், விளையாட்டுகள், வானொலி, நூலகம் தவிர வேறு எதுவும் இல்லாத வாழ்க்கை. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் நூலகம் இருந்ததும் வசதியாக இருந்தது. அன்று எடுத்து வந்தவைகளை அன்றே வாசித்து முடித்து மறுநாள் பள்ளிக்கு செல்லும்போது புதிதாக புத்தகங்கள் எடுத்து வருவேன். சனி ஞாயிறுகளில் காலையில் கிளம்பிச்சென்று மதியம் வரை நாழிதழ்கள் வாராந்தரிகள் வாசித்திருந்துவிட்டு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்து எடுத்து வந்த புத்தங்களை வாசித்துவிட்டு மாலையில் சென்று திருப்பியளித்துவிட்டு புதிய புத்தகங்களை கொண்டுவருவேன்.  ‘பொழுதுபோக்கு பெளதிகம்’, ‘நான் ஏன் என் தந்தையைப்போல் இருக்கிறேன்’, ‘வேதியலைப்பற்றி 107 கதைகள்’ வாசித்து அவற்றின் வழியாக ரஷ்ய மொழிபெயர்ப்புகளை அடைந்தேன். பதினொன்றாம் வகுப்பு வரும்போது பாரதி, பாரதிதாசன், சுரதா, வைரமுத்து, குருவிக்கரம்பை சண்முகம், மீரா, அப்துல் ரகுமான், இன்குலாப், மு.மேத்தா ஆகியோரை வாசித்திருந்தேன். ‘மனப்பாடமும் மண்வெட்டியும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை பள்ளி ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றது. வைரமுத்துவின் வாசகனாக அவருக்கு கடிதம் எழுதி, அழகிய கையெழுத்தில் எனக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். 


இவற்றையெல்லாம் வாசிக்கலாம் என்று வழிகாட்டவோ வாசித்ததை பகிர்ந்துகொள்ளவோ யாரும் இருக்கவில்லை கிடைத்ததை எல்லாம் வாசித்து, வாசிப்பின் சுவை பிடித்துப்போய் அதன் ரசிப்பின் போக்கில் என் பாதையை வந்தடைந்தேன். ஆன்டன் செகாவின் சிறுகதை தொகுப்புகள், ‘மக்ஸிம் கார்க்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’, ‘அன்னை’, ‘அன்னைவயல்’, ‘குல்சாரி’, ‘குற்றமும் தண்டனையும்’ (முதல் மொ.பெ.), ‘வெண்ணிற இரவுகள்’, ‘அன்னா கரீனினா’, ‘புஷ்கின் கவிதைகள்’ உட்பட ஆனைமலை கிளை நூலகத்தின் அப்போது இருப்பில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்களை பள்ளி இறுதிக்கு முன்பாகவே வாசித்து முடித்திருந்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் பள்ளி இறுதிவரை மின்சாரம், தொலைக்காட்சி, தொலைபேசி எதுவும் இல்லாத எளிய கிராமத்து ஓட்டுவீடுகளில் அரிக்கேன் விளக்குகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தது என் வாசிப்பிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது. அதுபோன்ற குக்கிராமங்களின் துவக்கப்பள்ளிகளில் பணியாற்றுவதே தன் விருப்பக் கடமை என்றும் அவை தான் வலிந்து மெற்கொண்ட தெரிவுகள் என்றும் பின்னாளில் அப்பா சொன்னார். 


வாசிப்பை தீவிரமாக்கும்படி அந்த கோடையில் இன்னொரு சம்பவமும் நடந்தது. பிறந்து வளர்ந்த ஊரை விட்டு நிரந்தரமாக என் விருப்பத்திற்கு எதிராக மதுரைக்கு குடியேறியது என்னை மேலும் தனிமையானாக ஆக்கியிருந்தது. மதுரை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராகி ஜெயகாந்தனின் சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், புதுமைபித்தன், மெளனி, பிச்சமூர்த்தி அசோகமித்ரன் சிறுகதைகள், ‘வாடிவாசல்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘திரைகளுக்கு அப்பால்’, ‘செம்மீன் (தகழி, சு.ரா. மொழிபெயர்ப்பு)’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா’ சிறுகதை தொகுப்பு, ‘செ.யோகநாதன் கதைகள்’ ‘குடும்பவிளக்கு’, ‘மணோன்மணீயம்’,  ‘சித்திரப்பாவை’, என கலந்து கட்டி வாசித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியில் சேர்ந்து எம்.வி. வெங்கட்ராம், ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், பூமணி,  பிரபஞ்சன், பாவண்ணன், யுவன் சந்திரசேகர், பிரேம்-ரமேஷ் ஆகியோரின் சிறுகதைகள், மாலனின் ‘ஜனகனமன’, சாருவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்’, சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகள்’ முதலான பல நூல்களையும் வாசித்து தமிழ் சிறுகதை, நாவல், கவிதைகள் பற்றி தோராயமான புரிதல்கள் ஏற்பட்டிருந்தன. கல்லூரி இறுதி ஆண்டில் சுஜாதா, பாலகுமாரன், தி.ஜானகிராமன், லா.ச.ர ஆகியோரின் புத்தகங்களை முற்றிலுமாக வாசித்து முடித்திருந்தேன். பத்திரிக்கைகளில் சுஜாதா எழுதும் எதையும் வாசிக்க தவறியதில்லை. அவர் வழியாக மனுஷ்யபுத்திரன் என்ற பெயரை கேள்விப்பட்டு வாசித்த ‘மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’, ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ ஆகிவை என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 


அடுத்தது பாலகுமாரனின் காலம், 1996 வரை அவரின் ஒரு எழுத்துகூட என் வாசிப்பில் தவறியதில்லை. விகடன் நிருபர் பாலா, மீனாட்சி சுந்தர், சால்வாடி ஈஸ்வரன், தினகரன், கவிஞர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் என்னைப்போலவே சுஜாதாவின் வெறியர்களாக இருந்து பாலகுமாரனின் வெறியர்களாக மாறியவர்கள். அவர்களின் நட்பில் புத்தகங்கள் பரிமாறியும் உரையாடியும் வாசிப்பு வளர்ந்துகொண்டிருந்தது. சாந்தா, சூரியா ஆகியோருடன் மதுரை பொறியியல் கல்லூரியில் ஆற்றிய உரையை கேட்டு பாலகுமாரனை நேரில் சந்தித்திருந்தேன்.


பிறகு மூலக்கூறு உயிரியல் படித்து, டார்வின், டொப்ஜாண்ஸ்கி, ஃப்ராய்ட் கற்று, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை(கண.முத்தையா)’, ‘மனுதர்மம் (தமிழ்நாடன்)’, இன்னபிற, வாசித்து கடவுள் நம்பிக்கையை கைவிட்டு இடது சாரி சிந்தனைகளின் அனுதாபியாகி டார்வின் கண்ணன், இரா.ஜவஹர் (கம்யூனிசம்- நேற்று இன்று நாளை), ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தேன். துளிர், உங்கள் ஹோமியோ நண்பன் ஆகிய இதழ்களில் என்னுடைய உயிரியல் கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன. ‘ஸீரோ டிகிரி’, ‘ஜெ.ஜெ.சில குறிப்புகள்’ முதல் ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘உப பாண்டவம்’ என வாசிப்பு தொடர்ந்தாலும், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்டின் உருவம்’, ‘கோணங்கியின்  மதினிமார்கள் கதை’, ஆகியவற்றிற்கு பிறகு சிற்றிதழ்களை நோக்கி கவனம் திரும்பியது.


இந்தியா டுடே, கணையாழி, காலச்சுவடு, சொல்புதிது மற்றும் சிற்றிதழ்கள் வாசிக்கும் வழக்கம தொடர்ந்து அவற்றில் வாசித்த ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, ‘ஆயிரம்கால் மண்டபம்’, ‘நாகம்’ ஆகியவை என்னுள் ஆழ்ந்த பாதிப்பை செலுத்தின. ‘நித்யசைதன்ய யதியுடன் ஒரு உரையாடல்’ இன்னபிற கட்டுரைகள் கவிதைகள் கதைகள் வாசித்து சூத்திரதாரி, பெருமாள் முருகன், மோகனரங்கன், பிரமிள், ஸ்ரீவள்ளி, லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற பெயர்கள் அறிமுகமாகியிருந்தன. இதை எழுதும்போது பச்சை மஞ்சளில் குறுக்கே கோடுபோட்ட போலோ சர்ட், கண்ணாடி அணிந்து காலை புத்துணர்வுடன் புன்னகைக்கும் இந்திரா பார்த்தசாரதியை முன் அட்டையில் ஏந்தும் ஒரு சொல்புதிது இதழ் நினைவுக்கு வருகிறது. 


2000 ஆம் ஆண்டு மதுரை பல்கலையில் ஆய்வேட்டிற்காக ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் அவரின் வீட்டில் சந்தித்து உரையாடி வந்த பூமிச்செல்வத்துடன் நகுலனை சந்திக்க திருவனந்தபுரத்துக்கு செல்வது ஆய்வு வேலைகளின் காரணமாக நிறைவேறாமல் இருந்த சமயம் கோணங்கியின் பாழி நாவல் வெளியாகியது. அதை உடனே வாசித்து விவாத நிகழ்வுக்காக அப்போதைய ஆராய்ச்சி மாணவர்களான (இப்போது பேராசிரியர்கள்) பூமிச்செல்வம், கந்தசுப்ரமணியம், டி.தர்மராஜ், பெரியசாமிராஜா, முருகன், ரத்தினகுமார், இவர்களுடன் ஈ.முத்தையா, ஓவியர் பாபு, முருகபூபதி, கவிஞர் சமயவேல் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டவர்களுடன் போடிநாயக்கனூர் ஏலக்காய் ரயில் ஏறி குறங்கனி எஸ்டேட் சென்றிருந்தேன். காலச்சுவடிலிருந்தும் சென்னையிலிருந்தும் சிலர் வந்ததாக நினைவு. புழக்கத்தில் உள்ள எழுத்துமுறைக்கு மாற்றாக புதியதொரு எழுத்துமுறை உருவாக வேண்டியதன் அவசியம் பற்றி கோணங்கி உற்சாகமாக பேசிக்கொண்டே வந்தார், காலை ரயிலில் ஏறியது முதல் மாலை மீள்வது வரை இடைவெளியில்லாத உரையாடல். “என்னுடைய எழுத்து மீடியாவுக்கு எதிரான போர் – கோணங்கி” என்பது மாதிரியான தலைப்பில் தளவாய் சுந்தரம் இந்நிகழ்வை கட்டுரையாக்க தூரத்தில் முதுகு தெரியும் என்னுடைய படம் ஒன்றும் குமுதத்தில் வந்திருந்தது. தனியனாக அமைதி நிரம்பியவனாக இருந்தாலும் என் இலக்கிய வாசிப்பில் தீவிர நம்பிக்கை கொண்டவனாகவும், சகவாசகர்களை எழுத்தாளர்களை சந்திக்கவும் அவர்களுடன் விவாதிக்கவும் ஆர்வம் கொண்டவனாகவும் இருந்தேன். 


மாஸசூசட்ஸ் பல்கலைக்கு வந்தபிறகு ஆங்கில இலக்கியம், கவிதை, ஆகியற்றின் மீது ஆர்வம் விரிந்து தமிழில் வாசிப்பு குறைந்திருந்தது. கைவசம் தமிழ் நூல்களும் இல்லை. ஆகவே விடுமுறையில் மதுரைக்கு திரும்பியிருந்த சமயம் தமிழ் இலக்கியத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்க முயன்று ‘நீராலானது’, ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’, ‘இடமும் இருப்பும்’ ‘கதாவிலாசம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘ராஸ லீலா’, ‘கன்னியாகுமரி’ அனைத்தையும் வாசித்திருந்தேன். 2007ஆம் ஆண்டு ஞாயிறு ஆகஸ்ட் 12, என நினைக்கிறேன். எஸ். ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’, ‘அயல் சினிமா’ உட்பட 10 புத்தகங்களின் தொகுப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உயிர்மை வெளியிட்ட தினம். எஸ்.ரா.வின் கையெழுத்தை பெற்று திரும்பிக்கொண்டிருந்தபோது தூங்குமூஞ்சிமர நிழல் பாவிய வாசற்படியில் ஜெயமோகனை பார்த்தேன். 


நிற்க. இங்கு இன்னொரு விஷயத்தையும் நான் சொல்லவேண்டும். ஒரு பொது நிகழ்வில் பிரபஞ்சனையும் யுவன் சந்திரசேகரையும் ஒருசேரக்கண்டு சந்திக்க ஓடினேன். பிரபஞ்சனிடம் அவரின் அப்பாவின் வேஷ்டி பற்றியும் யுவனின் கானல் நதி பற்றியும் சில நொடிகளாவது பேசலாம் என்ற ஆர்வத்தில்.  பிரபஞ்சன் பெயருக்காக கைகுலுக்கிவிட்டு அருகில் எவரும் இல்லாதது போல யுவனுடன் பேச ஆரம்பிக்க யுவனும் உரையாடலில் ஆழ்ந்துவிட சில நிமிடங்கள் வெறுமனே அருகில் நின்றுகொண்டிருந்துவிட்டு திரும்பிட நேர்ந்தது. பல்வேறு நாடுகளின் ஆய்வாளர்களை சந்தித்து புதியவரை நேரில் சந்திக்கும் மாண்புகளையும், ஆளுமைகளின் குறைபாடுகளையும் அறிந்திருந்தேன் என்றாலும் மேற்படி சம்பவம் ஒரு வடுவாக எஞ்சிவிட அதன்பிறகு எழுத்தாளர்களை சந்திப்பதை ரகசியமாக வெறுத்தும் தவிர்த்தும் வந்தேன் என்பது, இப்போது யோசிக்க எனக்கே ஆச்சரியமளிப்பது. வேறென்ன சொல்வது? நம் மனம் சில சமயம் நாமே கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வினோதமானது. அருகில் நின்று பார்ப்பேன், உரையாடுவதை முழுக்க கேட்டுக்கொண்டிருப்பேன். எழுத்தாளர்கள் மீது ஆழமான மரியாதையும் நட்புணர்வும் எப்போதும் இருப்பதுதான் என்றாலும் அறிமுகம் செய்துகொள்ளாமல் திரும்பிவிடுவேன். ஜெயகாந்தன், மாலன், நாஞ்சில்நாடன், சுகுமாரன், சு.வேணுகோபால், சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் பேசுவதை மதுரையில் மிக அருகில் பார்த்திருக்கிறேன், ஆனால் அறிமுகம் செய்துகொண்டதில்லை. 


என்னுடய இந்த நுட்பமான சிக்கலை சரிப்படுத்த ஒருவேளை என் ஆழ்மனம் விரும்பியிருக்கலாம். ஏதோ ஒரு புதிய உரிமையாலும் தைரியத்தாலும் உந்தப்பட்டு ஜெயமோகனை நோக்கிச் சென்றேன். அறிமுகப்படுத்திக்கொண்டு அவரின் படைப்புகளை வாசித்திருப்பதை சொன்னவுடன் என் பின்னணியை நட்புடன் விசாரித்துக்கொண்டார். கன்னியாகுமரி நாவலை விரும்பி வாசித்ததை சொல்லிவிட்டு ஃபெலினியின் 81/2 படத்துடன்  ஒப்பிட்டுச் சொல்ல எண்ணங்களைத் திரட்டிக்கொண்டிருந்தபோது, “விஷ்ணுபுரம் படிச்சீங்களா?” என்றார்.  “இல்லை” என்றதும் பொறுமையாக “அது கொஞ்சம் கஷ்டமான புத்தகம் தான், படிச்சுப்பாருங்க!” என்றார். சாதீய அடுக்குகளையும் கடவுள் நம்பிக்கையும் முன்வைக்கும் கதை என்று ஒரு த.மு.எ.ச இலக்கிய கூட்டத்தில் கேள்விப்பட்டிருந்ததால் வாசிக்கவில்லை என்பதை அவரிடம் சொல்லவில்லை. பிறகு சுகா ‘கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ, பற்றிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ’ வரிகளின் நுணுக்கத்தை பாடிக்காட்டுவதையும் மரபியல் ஆராய்ச்சி பற்றி ஷாஜியின் விளக்கங்களையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று விழா மேடையில் மனுஷ்யபுத்திரன், சுகுமாரன், பொன்வண்ணன் இன்னும் பலர் உரையாற்ற ஜெயமோகன் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.  அதேபோல, சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ், ஸ்ரீனிவாஸ், கார்த்திக் மற்றும் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன் ஆகியோருடன் நிகழ்ந்த ஷாஜியின் ‘சொல்லில் அடங்காத இசை’ வெளியீட்டு விழாவிலும் பார்வையாளர்களுள் ஒருவராகவே எங்கோ அமர்ந்திருந்தார். அப்போது அவருடன் நிறைய உரையாடியிருக்கவில்லை. என்றாலும் ‘நவீன இலக்கியம் ஒரு அறிமுகம்’, ‘எதிர்முகம்’, ஆகிய நூல்களில் பல அடிப்படையான விஷயங்கள் மீது தீர்க்கமான திட்டவட்டமான விளக்கங்களை வாசித்து அவர் கதைசொல்லி மட்டுமல்ல ஒரு அறிஞரும் கூட, என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. மினியாப்பொலிஸ் திரும்பியபிறகு அவரின் வலைத்தளம் இருப்பதை கண்டுபிடித்து அன்றாடமும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அவரின் அமெரிக்க பயணம் பற்றி வெளியாகிய அறிவிப்பை கண்டு 2009 ஆகஸ்டில் மினியாப்பொலிஸில் சந்திக்கும் முன் ‘ஜெயமோகன் சிறுகதைகள்’, ‘ஏழாம் உலகம்’, ‘விஷ்ணுபுரம்’ நாவல்களை வாசித்திருந்தேன்.  


இந்து ஞானமரபை முற்றிலுமாக நிராகரித்து புறக்கணித்திருந்ததால் சாங்கியம் முதல் பெளத்தம் விஷிஷ்டாத்வைதம் வரையிலான மரபுகள் பற்றி இன்றுள்ள விரிவான கல்வியும் புரிதலும் அப்போது இருக்கவில்லை. என்பதால் என்னை அடித்து நொறுக்கி இல்லாமலாக்கி புரட்டிப்போட்டு மிரட்டி அச்சுறுத்தியது விஷ்ணுபுரம். ஒருவகையில் அதன் வாசிப்பு அனுபவம் பள்ளி இறுதி விடுமுறையில் ‘குற்றமும் தண்டனையும்’ வாசித்து கண்ணீர் விட்டு மனம் அரற்றிக்கிடந்த இரவுகளுக்கு இணையானது. மானுட சிந்தனையின் வலிமையை முழுக்கவும் ஒன்று திரட்டி அதன் விளிம்பில் நின்றும், தாண்டிச்சென்றும் ஏதோ ஒன்றன் உச்சத்தின் நிறைவை உய்த்து உணரும் மனஎழுச்சி. நம்மை நாமாக இருத்தியிருக்கும் மனித நியதிகளால் கட்டுண்ட மானுடத்தின் இயலாமையை, சிறுமையை, அற்பத்தை உணர்ந்ததால் உருவாகும் தாழ்வுணர்ச்சியின் இழிவு. நீந்தத் தெரியாதவனை எல்லாத்திசைகளிலிருந்தும் மூழ்கிச் சூழ்ந்து கொள்ளும் கனத்த கிணற்று நீர் போல மனதை வன்முறையாக ஆக்கிரமித்துக்கொண்ட முடிவின்மையின் வெறுமை. வெறுமையின் நிறைவில் அதைப்பற்றி விரிவாக விவாதிக்கும் துணிவோ ஊக்கமோ அவரை நேரில் சந்திக்கையில் இருக்கவில்லை. ”விஷ்ணுபுரம் அளவுக்கு செறிவான தத்துவ விவாதங்களை ஒரு நாவலில் படித்ததில்லை. படிக்கையில் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினேன்” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ”அவ்வளவு தத்துவமும் நாவலில் கதையோடு வருவதால் தான் அப்படி இருக்கிறது” என்றார். மனுதர்மம் எழுதப்பட்ட காலத்தின் பின்னணி, மதங்களுக்கும் சோஷியலிஸத்துக்கும் உள்ள பொதுமைகள், அறிவியல் புனைவுகள், ஜானகிராமன் லா.ச.ரா. ஆகியவர்களின் எழுத்துக்களின் ஒன்றுமையும் வேற்றுமையும் ஜெயகாந்தன், அசோகமித்திரன், க.நா.சு. ஆகியோரை அவர் சந்தித்த அனுபவங்கள் என்று பல தளங்களிலும் விரிவாக கேட்டுக்கொண்டிருந்தேன். பாரதியின் கவிதைகளை ‘விவரம் தெரிந்த பிறகு’ முழுதுமாக வாசித்து ஏற்படும் ஏமாற்றம், பொதுவில் புழங்கும் மகாபாரத கதை தட்டையாக இடைவெளிகளுடன் இருப்பது, எதிர்கால சந்ததிக்கு மோகமுள் ஏன் ஏமாற்றமளிக்கும் படைப்பாக இருக்கும் என்பது போன்ற என் எண்ணங்களை சொல்லிக்கொண்டிருந்தேன். அவரை சந்தித்த பிறகு, தமிழ் இலக்கியத்தை விட்டு விலகி தூரமான ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கும் வருத்தம் குறைந்து, வாசிப்பின் மீது புதிய உற்சாகமும் தெளிவும் ஏற்பட்டிருந்தது. 


‘விசும்பு (தொகுப்பு)’, ‘காடு’, ‘டார்த்தீனியம்’, ‘பின்தொடரும் நிழலின் குரல்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘கொற்றவை’, ஆகிய படைப்புகளை வாசித்ததுடன் ‘உலோகம்’, ‘வெள்ளையானை’, ‘அறம் சிறுகதைகள்’, ‘வெண்கடல் சிறுகதைகள்’, ‘இரவு’ ‘புறப்பாடு’ ‘முதற்கனல்’, ‘வண்ணக்கடல்’, ‘நீலம்’,  ஆகிய படைப்புகள் உருவாகும் தருணங்களில் உடனிருக்கவும் வாசித்து விவாதிக்கவும்  குழும உரையாடல்கள் வழி வாய்த்திருந்தது. நான் ஊருக்கு சென்ற சமயங்களில் அவர் ஐரோப்பாவிலும் வெளியூர் பயணங்களில் இருந்ததால் நேரில் சந்தித்ததில்லை. அவருடன் பேச நினைத்து தொலைபேசியை கையில் எடுக்கும்போதெல்லாம் அவர் திரைப்பட விவாதத்தில் பலருடன் அமர்ந்திருப்பது போலவோ, எழுத்துமேசையில் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பது போலவோ மனதில் சித்திரம் உருவாகும். அதனால் ஏற்படும் தயக்கம் அவரை அழைக்க முடியாமல் செய்து தொலைபேசியில் உரையாடியதும் இல்லை. ஆனால் அவரின் அமெரிக்க பயணங்களில் சந்தித்து உரையாடல்களை கேட்டிருக்கிறேன். வெண்முரசின் பிந்தைய நாவல்களையும், நோயச்ச காலத்தில் எழுதிய புனைவுகளையும் வாசிப்பதில் சற்று சுணக்கமாகிவிட்டது. தவிர, அதற்கு முந்தைய குறைந்தது எண்பதுசத புனைவுகள், அபுனைவுகளை வாசித்திருக்கிறேன் என்பதை என்னால் துணிவுடன் கூறமுடியும், 


நாடோடியைப்போல இலக்கில்லாமல் சுற்றித்திரிந்து வாசித்த பல நூல்களையும் அவற்றின் சரடுகளையும் சரிபார்த்து தொகுத்துக்கொள்ள ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கிய கருவிகளாக அமைந்திருக்கின்றன. தாறுமாறாக புத்தகங்கள் குவிந்து கலைந்து கிடக்கும் அறையை தூசுநீக்கி புத்தகங்களை அவற்றிற்குறிய அலமாரிகளின் வரிசையில் நறுவிசாக அடுக்கி வகைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவற்றிற்கான விதிகளையும் முன்வரைவுகளையும் வகுத்துக்கொடுத்தது கட்டுரைகளின் வாயிலாக அவர் எனக்களித்தவற்றுள் முக்கியமானது. அப்படியான அவரின் வரிசைமுறையில் எனக்குள்ள வேறுபாடுகளின் நுண்மையை எண்ணிப்பார்த்து வேறுபடும் புள்ளிகளை திட்டவட்டமாக என்னால் புரிந்துகொள்ள முடிவதும் பெரும்பாலும் ஜெயமோகன் கட்டுரைகளின் வழி சாத்தியமானதுதான். என் வாசிப்பு முழுதையும் மீள்பார்வை செய்யவைத்ததுடன் அனைத்து பழைய புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ந்து வாசிக்க அறியத்தரும் வாசலாகவும் ஜெயமோகனின் கட்டுரைகள் அமைகின்றன. இலக்கியத்தின் அடிப்படைகள், கலைகள், கோட்பாடுகள், இலக்கிய விமர்சனம், அழகியல் பற்றிய அடிப்படைகளை ஜெயமோகன் விவாதிக்கும் கட்டுரைகளின் தர்க்க அடுக்கும், கூர்மையும் துணுக்குறவைப்பது. கடந்த இருபது வருடங்களில் அமெரிக்காவின் ஒரு ஐம்பது அமர்வுகளிலாவது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத ஒற்றை ஆளாக பங்கேற்றிருக்கிறேன். பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், கவிஞர்கள் பலரிடம் உரையாடியிருக்கிறேன். எவரிடமும் சரி நிகராக நின்று மொழியை, கவிதையை, இலக்கியத்தின் அடிப்படைகளை விவாதிக்க எனக்குள்ள தெளிவையும் துணிவையும் தன்னம்பிக்கையையும் அளித்ததில் ஜெயமோகனின் கட்டுரைகளுக்கு பெரும் பங்கு உண்டு. 


மொழியை நூலாகத் திரிக்கவும், மணலாக நிறைக்கவும், கல்லாக்கி சிற்பமாக்கவும், களியாக்கி சிலைகளாக்கவும், உருக்கி உலோகமாக ஆக்கவும், பொன்னாக நுணுக்கவும், நீராகப்பொழிந்து நிறையவும், புனைவுகளில் முடிந்திருக்கிறது. பெருங்கடலை சிறுதுளியாக்கியும், சிறுதுளியை கடலாக்கியும், பெரும் மலைத்தொடரை சிறு துகளாக்கி ஊதிப் பறக்க வைப்பதும், சுடரின் ஆழத்தின் கருமையை விரித்து பூதாகரமாக்கி அதன் இருண்மையின் ஆழத்துள் அமிழ்வதும், பாதாளத்தின் ஆழத்தில் இருந்து எழும்பி விண்னோக்கி பறக்க முடிவதும், இருண்மையின் ஆழத்துள் பொதிந்திருக்கும் சிறுமினுக்கை விரித்து பெரும் சுடராக்கி ஏந்தி மலைகள் கடல்கள் தாண்டி புதிய உலகங்களை காட்ட முடிவதுமான மாயம் தமிழில் நிகழ்ந்துள்ளது. மொழியின் இதுவரை அறியாத சந்து பொந்துகள் இடுக்குகள் குகைகள் பள்ளங்கள் உயரங்கள் சமவெளிகள் பள்ளதாக்குகள் -அனைத்திலும் ஜெயமோகனின் எழுத்து பயணித்துள்ளது. கொற்றவை மற்றும் உலகின் மிக நீண்ட காப்பியமாகியிருக்கும் வெண்மரசு வரிசை நூல்களில் புழங்கியிருக்கும் மொழி தமிழ் இதுவரை அடையாத உச்சங்களுள் ஒன்று. 


தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுக் காலத்தை ஜெயமோகனுக்கு முன், ஜெயமோகனுக்கு பின் என இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம் எனும் அளவுக்கு தமிழின் கடந்த கால, நிகழ்கால எழுத்துக்களை பகுத்து தொகுத்ததுடன் புதிய கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி எதிர்காலத்திற்கு பாலம் அமைத்ததும் அவரின் முக்கிய பங்களிப்பாகும். சமூக பண்பாட்டு கலாச்சார விவாதங்களில் ஒரு அறிஞன் ஆழ்ந்து  அடைந்த கண்டடைதல்,  மறுபக்கம் அடிப்படைவாதிகள், இடதுசாரிகள், நடுநிலைவாதிகள், -மற்றும் இவற்றிற்கிடையேயான எல்லைகளுக்குள் தொடர்ந்து ஊசலாடும் தாராள முற்போக்கு நடுநிலைவாதிகள் பொதுவாக ஏற்கத்தயங்கும் கசப்பான ஒரு உண்மையும் அதில் இருக்கும். பல்வேறு சிந்தனைத்தரப்புகளுடன் தொடர்ந்து ஆக்கபூர்வமான உரையாடல்களில் இருக்க முடிவதும் ஒரு சாதனையே. பெரும் படைப்புகளின் ஆசிரியர், இலக்கிய விமர்சகராக மட்டுமல்லாமல் இலக்கிய செயல்பாட்டாளராக, பண்பாட்டு ஆய்வாளராக, பயணியாக, சிந்தனையாளராக அவரின் இடம் இது வரை வகிக்கப்படாதது. இவ்வளவு ஆழமும் விரிவும் செறிவும் தீவிரமும் கொண்டு எழுதிய எழுத்தாளர் என வரலாற்றில் சிலரையே கூறமுடியும். 


எனக்குத் தெரிந்தவரை இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான். ஜெயமோகன் என்ற ஆளுமையை எண்ணும்போது என் மனதில் தோன்றும் பல படிமங்களுள் ஒன்றும் இது. 


மேடைக்கு கீழே பெயர் தெரியாத பார்வையாளர்களுள் ஒருவராக அமர்ந்திருக்கும் ஜெயமோகன். எத்தனை கவனச்சிதறல்கள் இருந்தாலும் அவற்றுக்கு அப்பால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்து உள்வாங்கிக்கொண்டு, காணும் கேட்கும் உணரும் எதையும் குறிப்புகளாக ஆக்கி இறுத்தி அவை ஒவ்வொன்றையும் தொகுத்தும் பகுத்தும் விரித்தும் ஆராய்ந்தபடி கால்குலேட்டர்களுக்கு இடையில் ஒரு க்வாண்டம் கம்ப்யூட்டர்போல, அமைதியாக, அமர்ந்திருக்கும் ஜெயமோகன். 


எது எப்படி இருந்தாலும் எத்தனை அழைக்கழிப்புகள் பயணங்கள் சிரமங்கள் தொந்தரவுகள் இருந்தாலும் அன்றாடமும் எழுத வேண்டியவைகளை எவ்வித சாக்கு போக்குகளும் இல்லாமல் எழுதி முடித்துவிட்டு மட்டுமே உறங்கச்செல்லும் ஜெயமோகன். ஒரு தனி மனிதனாக அவர் கைக்கொள்ளும் கவனமும் காரிய ஒழுங்கும் வினையூக்கமும் செலாற்றலும் உலகின் எந்த நவீன மனிதனும் முன்னோடியாக கொள்ளத்தக்கது. அவர் நெடுங்காலம் இருந்து மேலும் மகோன்னதமான படைப்புகளை பல நூறையும் எழுதவேண்டும். 


- வேணு தயாநிதி

ஜுலை 23, 2022

மினியாப்பொலிஸ்.

No comments:

Powered by Blogger.