மாசில் வீணை - அகரமுதல்வன்


01


நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் 


– திருநாவுக்கரசர்


மழை பெய்து ஓய்ந்த பின்மதியத்தில் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள பழைய புத்தகக்கடையில் 'அனல்காற்று' என்ற நாவலைக் கண்டெடுத்தேன். முன் அட்டையில் பாதி கிழிந்துபோயிருந்தது. உள்பக்கத்தை புரட்டிப் பார்த்தேன். முதலாவது அத்தியாயத்தின் இரண்டாவது பத்தியின் இறுதி வரிகள் இப்படி எழுதப்பட்டிருந்தன. 'தனிமை என்ற சொல்லை மொழி தோன்றிய நாளில் இருந்து இக்கணம் வரையெனத் துளித்துளியாக உணர்ந்தவனாக இங்கே நிற்கிறேன். இப்புவியில் பிரிந்து செல்பவர்களைப் போல குரூரமானவர்கள் எவருமில்லை சுசி.' இந்த வரிகள் என்னுடையவை என்று உரிமை கொண்டேன். புலம்பெயர்வின் தொடக்க நாட்கள் அவை. நிலத்தைப் பிரிந்தும்  காதலைப் பிரிந்தும் எத்தனையோ பிரிவுகளோடிருந்த அகதியாகிய என்னுள் துளித்துளியாய் இறங்கிய இந்த வார்த்தைகளின் மூலம் எழுத்தாளர் ஜெயமோகன் என்பவரை அறியலானேன். 'அனல்காற்று' நாவலை அன்றிரவே வாசித்து முடித்தேன். இயல்பில் அடங்க மறுக்கும் பருவத்தின் வெப்பம் என்னுடல் பிளந்து ஒலிப்பதை கேட்க முடிந்தது. உடல் அழிந்து புலன்களுக்குள் குளிர் அசைந்து சிலிர்த்து நெளிந்தது. இப்போதும் சிலவேளைகளில் 'அனல்காற்'றை வாசிப்பேன். படைப்பூக்கம் தரவல்ல சக்தி அந்த நாவலுக்கு இருப்பதாக உணர்கிறேன். வாசிப்புலகிற்குள் நுழைபவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் நாவல்களில் கட்டாயம் 'அனல்காற்று' இடம்பிடிக்கும்.


ஆனால் ஜெயமோகன் என்றதும் ஞாபகத்திற்கு வருவது 'மாடன் மோட்சம்' என்ற அவரது சிறுகதையே. அந்தக் கதையை முதன்முறையாக வாசித்து முடித்ததும் பலவிதமான கொந்தளிப்பும் அடங்க மறுக்கும் வியப்பின் பெருக்கும் என்னுள்ளே எழுந்தன. அதே அகதி வாழ்வின் தொடக்க நாட்கள். அப்போதுதான் வாசிப்பை தீவிரமான சிகிழ்ச்சையாக்கிகொண்டேன். மலர்ந்த பொழுதிலிருந்து உதிரும் பொழுதுவரை வாசிப்பின்மீதே தினங்கள் குடிகொண்டன. தமிழின் மிகச்சிறந்த படைப்பிலக்கியங்களை வாசிப்பின் மூலமாகவே கண்டடைந்தேன். அந்தச் செயற்பாட்டின் மூலமே ஜெயமோகனின் சில படைப்புகளையும் சந்தித்தேன். பின்னர் அவரது எழுத்துலகத்தை பூரணமாக அறிந்துகொள்ள விழைந்தேன். அனைத்து நாவல்களையும் வாசித்தேன்.


'உலோகம்' நாவலை வாசிக்கையில் கடுமையான அதிர்ச்சியாக இருந்தது. ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் நிகழ்ந்த தனிமனிதவாதங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து ஆழமான அறிதல்களற்ற ஒருவர் 'எழுத்தில் நிகழ்த்திய அசம்பாவிதம்' என்ற உறுதியோடும் அசட்டுப் புன்னகையோடும் அந்தப் புத்தகத்தை மட்டும் எனது சேமிப்பிலிருந்து விலக்கிக்கொண்டேன். இப்போதும் என்னுடைய புத்தகச் சேமிப்பில் அந்தப் புத்தகம் இருக்காது, ஏனெனில் அது நான் கொண்டாடக்கூடிய படைப்பிலக்கியவாதியின் நாவல் அல்ல என்பதே எனது தரப்பு. இந்த மனோபாவம் வாசக அதிகாரத்தால் மட்டும் நிகழவில்லை. என்னுடைய அரசியல் நிலைப்பாட்டினாலும் நிகழ்ந்தது. நூறாண்டு காலமாக குருதி தோயும் ஈழப்பிரச்சினை என்பது இந்திய அரசியலுக்கு மட்டுமல்ல இந்திய அறிவுஜீவிகள் பலருக்கும் தொடுகறியாக இருந்துவருவதன் சாட்சியென 'உலோகம்' நாவலை அடையாளப்படுத்தலாம் என்றே கருதுகிறேன்.


ஆனால் எதன்பொருட்டும் ஜெயமோகன் எனும் படைப்பாளுமையை என்னுடைய வாசிப்பில் விலக்கம் செய்ய விரும்பவில்லை. மாறாக எஞ்சியுள்ள ஏனைய நூல்களையும் வாங்கி வாசித்தேன். ஒருபக்கம் ஜெயமோகன் என்கிற புனைவெழுத்தாளனை வாசிப்பின் நிமித்தம் உள்ளூரக் கொண்டாடியும் மதிப்பளித்தும் வந்தேன். மறுபக்கத்தில் அவரது அரசியல் கருத்துகள் மீது கடுமையான சீண்டல் மிக்க எதிர்வினைகளையும் நிகழ்த்த விழைந்தேன். ஆனால் அவரது புனைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் வசியமுற்ற உயிரியைப்போல என்னை நானே ஆக்கிக்கொண்டேன்.


அவருடன் நிகழ்ந்த அறிமுகத்திற்கு பின்னால் இலக்கியத்தையும் அரசியல் நிலைப்பாடுகளையும் விவாதிக்க முடிந்தது. அவரின் நிரந்தரமான சில நிலைப்பாடுகளை மறுக்க முடிந்தது. செழுமை பெறவும் தெளிவுகொள்ளவும் மட்டுமல்ல, உரையாடலின் வழியாக அவரை தெளிவுறுத்தவும் வல்ல ஜனநாயகத்தினை எனக்கும் அவருக்குமான உறவின் வெளி தகவமைத்துத் தந்தது. ஜெயமோகன் மீது திட்டமிட்டு உருவாக்கப்படும் வசைகளுக்கும் அவதூறுகளுக்கும் எதிராக பல நண்பர்களோடும் ஆளுமைகளோடும் பொருதினேன். அவர்களில் சிலரை எனது நட்புலகிலிருந்து விலக்கிக்கொண்டேன். எந்த வாசிப்புமற்று எழுத்தையும் எழுத்தாளர்களின் மாண்பையும் கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்கும் நச்சுச்சூழலின் மீது அதிருப்தி கொண்டேன். நான் ஜெயமோகனின் வாசகராக, நண்பராக, மகவாக, அன்புக்குரியோனாக ஆகுவது என்னுடைய உரிமை என்பதை பிரகடனம் செய்தேன். அதற்கு நிகழ்ந்த எதிர்வினைகளும் கூச்சல்களும் வசவுகளும் எண்ணிலடங்காதவை. எல்லாவற்றுக்கும் அப்பால் அழிவற்ற சிருஷ்டிகர்த்தர்களில் ஒருவரான ஜெயமோகனின் எழுத்து மொழிக்கு அருகில் அமர்ந்துகொண்டேன். அது நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல, எனது ஜீவிதத்தின் முழுமைக்கும் இனிய வெகுமதியென உணர்ந்துகொண்டேன். குளிர்காலச் சூரியனாய், வேற்றுமையற்ற வெளிச்சமாய், பருவ காலங்களாய் மொழியின் பனிக்குடத்தில் தன்னுடைய சொற்களால் நித்தியத்தன்மை பெறுகிறார் ஜெ.


அண்மையில் தமிழ்ச் சிறுகதைகளின் தொடர்ச்சியைப்பற்றி நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தேன். அப்போது புதுமைப்பித்தனின் 'சங்குத்தேவனின் தர்மம்' என்றொரு கதையையும் அதன் பாத்திரப் படைப்புக்களையும் சொல்லி வியந்தேன். அங்கிருந்த நண்பர் புதுமைப்பித்தன் 'பொன்னகரம்' சிறுகதையில் மட்டுமே தன்னை வசீகரித்தார் எனச் சொன்னார்.  அதைத் தவிர நீங்கள் வாசித்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் என்னவென்று சொல்லமுடியுமா எனக் கேட்டேன். அந்த நண்பர் அதுதான் ஒரு கதை போதுமே என்று விளக்கம் அளித்தார். அதிர்ச்சியோ வியப்போ அடைய அதில் எதுவுமில்லை. இலக்கிய வாசிப்பு எனும் அடையாளம் வெறும் பம்மாத்து வேலையாக ஆக்கப்பட்டிருக்கும் இணையவெளியில் அவதரித்த அந்த நண்பரோடு மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை என உரையாடலை விலக்கிக்கொண்டேன். ஏனைய நண்பர்களில் ஒருவர் ஜெயமோகனின் சிறுகதையுலகம் பற்றி பேச்சைத் திருப்பினார். அவருடைய கதைகள் குறித்து என்னைப் பேசுமாறு கேட்டுக்கொண்டார். எனக்குப் பிடித்தமான ஜெயமோகன் கதைகளின் தலைப்புகளைச் சொன்னேன்.


'திசைகளின் நடுவே' தொகுப்பிலுள்ள 'கண்' என்ற சிறுகதையில் வரக்கூடிய தென்னை மரம் பற்றிய இந்த விவரிப்பைச் சொன்னேன்.


'உற்சாகமான மரம் அது. இந்தச் சோகம் அதற்கு அபூர்வம். காலையில் வானம் கழுவிச் சாய்த்து வைக்கப்பட்ட பெரிய நீல நிறக் கண்ணாடி போலத் தோன்றும்போது பார்க்கவேண்டும் அதை. வானத்தைத் துடைக்க அசையும் பட்டுக்குஞ்சம்போல் இருக்கும். கூந்தல் காற்றில் மிதக்க, இடை அசைத்து ஆடும் நளினமான பெண்மை. காலையில் ஓலைகளின் பச்சை நிறம் சற்று நீர்த்துப்போயிருக்கும். ஒளியின் பிரகாசம் ஏற, ஏற ஓலைப்பரப்பு மின்னத் தொடங்கும். புள்ளி புள்ளியாக ஒளித்துளிகள். அவை காற்று வீசும்போதும் வரிசை குலையாமலேயே அசையும்.'


உங்களுக்கு நினைவு சக்தி அதிகமென பாராட்டிய நண்பரை மறுத்து, இந்த வார்த்தைகளை எழுதிய எழுத்தாளன் மொழியால் நிதமும் நினைவுகூரப்படுவான் என்றேன். ஜெயமோகனின் தொடக்ககால சிறுகதைகளில் நிரம்பியிருந்த மொழியின் வசீகரமும் கூறல் மொழியும் தமிழ்ச் சிறுகதையின் முகத்தை கிளர்ச்சியுடனும் கம்பீரத்துடனும் இன்னும் உயர்த்தியிருக்கிறது என்பது என்னுடைய துணிபு. 'படுகை', 'நாகம்', 'போதி', 'ஆயிரம் கால் மண்டபம்' போன்ற கதைகள் உறுதியான பண்பாட்டுத் தளத்தில் இயங்குபவை. தொன்மங்களை வீறுடன் ஊடுருவிச் செல்வன.


பேச்சியை வென்ற செம்பன்துரை பறவைகளின் எச்சம் வீச்சமடித்த மரத்தடியில் பசுந்தழைப் புதருக்குள் தனிமையில் கிடந்தார். அந்தப் பெயரை வாசிக்க இயலவில்லை. சகட்டு மேனிக்கு சாயம் பூசிவிட்டிருந்தார்கள். அவருக்கு நடமாட முடிந்ததென்றால் அப்பகுதியிலேயே இருக்கமாட்டார் என்றேன். குரோட்டன்ஸ் செடிகளின் நிழலை அவர் எப்படித் தாங்கிக்கொள்வார்? அவரென்ன, பேச்சிகூடத்தான் ஓடிப்போயிருப்பாள் என்றான் ராதாகிருஷ்ணன், அந்தச் சிறு பிரதிஷ்டையைச் சுட்டிக்காட்டியபடி. சதுரவடிவிலான பெரிய கல் மேடை மீது கரடுமுரடுமான பிரம்மாண்டமான ஒரு மரம் நின்றிருந்தது. பெரிய, தடித்த இலைகள் மண்டிய கிளைகள் நான்கு பக்கமும் தழைந்து கீழே வந்து கூடாரம் போலக் கவிழ்ந்திருந்தன. உள்ளே அரை இருள். ஈரமாய் சருகு மக்கிய சொதசொதவென்ற தரை. மரத்திலே அறையப்பட்டதாய் அம்மனின் வெண்கல முகம். கீழே கரிய பலிபீடம். ஒரு வாரத்துக்கு முந்தைய பூக்கள் சிதறிக் கிடந்தன. சகட்டுமேனிக்குக் குங்குமம் அப்பப்பட்டிருந்தது.


'பேச்சியம்மன் சோயல்லோ 

பேய்ஞ்சதூ மலை மேலே 

பேச்சியம்மன் முடியல்லோ 

பிளுதெறிஞ்சான் செம்பன்தொரெ...'


என்று சிங்கியின் குரல் கேட்பது போலிருந்தது.


'படுகை' சிறுகதையின் இந்த விவரணை வழியாக முகிழ்த்தெழும் ஓருலகிற்குள் வாசகனை அழைத்துவரும் இடையறாத உறவு பேணப்படுகிறது. ஜெயமோகன், மிகச் சிறிதான தமிழ் வாசக மரபில் செழுமையுற்ற வாசிப்பைக் கோரும் கதைகளை நிறையவே எழுதினார்.


02


எழுத்தாளன் மொழிக்கு குருதி அளிப்பவன். புத்துயிர் நிறைப்பவன். அவனுடைய படைப்புலகின் மூலம் வாசகவெளி கண்டடையும் தரிசனம் ஏராளம். திசைகளில் விழித்து நிமிர்கின்ற சூரியனைப்போல ஒளிபொழியும் வார்த்தைகளை எழுத்துக்காரன் மொழிக்குள் தூவுகிறான். மனிதச் சுவடுகளைக் கண்டடையும் வரலாற்றைப்போல மொழியின் வரலாற்றை இலக்கியத்தை வைத்தே கண்டடைய முடியும். மொழியின் ஓசையை வார்த்தைகளில் தழைக்கச் செய்யும் வேட்கை படைப்பாளனுக்கு  மட்டுமே வாய்த்திருக்கிறது. முலைகளின் தாய்மையைப்போல ஜெயமோகனின் மொழிச்சிலிர்ப்பு எனக்கு அமுதூட்டின. 'கொற்றவை' நாவலின் 'பழம்பாடல் சொன்னது' பகுதியில் வருகிற இந்தப் பத்தியை எப்போதும் என்னால் மறக்கமுடியாது.


'அம்மா என்ற அச்சொல்லை அவர்கள் குடி பாலூட்டும் விலங்கொன்றிலிருந்து கற்றுக்கொண்டது. மின்னலிலிருந்து தீயை அடைந்தது போல. மூன்று ஒலிகள் கூடிய அடுப்பினுள் அச்சொல் அணையாது எரிந்துகொண்டிருந்தது. பின்பு அழகுக்கும் சிறப்புக்கும் அதுவே சொல்லாயிற்று'


'கொற்றவை' நாவலில் உருவாக்கப்பட்ட புதிய சொற்கள் ஏராளமானவை. ஜெயமோகன் குறிப்பிடுவது போலவே அதனை புதுக்காப்பியம் எனக் கொள்ளலாம். 'திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர்' எனத் தொடங்கும் இந்நாவல் என்னுள் உறைந்து எனக்கு ஒளி தருவது. 

03

எதிர்காலத்தில் ஜெயமோகன் படைப்புகளைப் பற்றிய ஒரு விரிவான அலசலை நிகழ்த்தவேண்டுமென்ற ஆர்வம் எனக்கிருக்கிறது. அதற்கு மாபெரும் உழைப்பைச் செலுத்தவேண்டும். 'பின்தொடரும் நிழலின் குரல்' நாவலை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு வேளையிலும் அருணாசலத்துக்குள் நிகழும் மன அதிர்வுகளையும், வீரபத்திரபிள்ளையின் உருவத்தையும் நினைத்து அழுதிருக்கிறேன். லட்சியவாதிகள் மனநோய்க்காரர்களாகக் கைவிடப்படும்போது கடவுளிடம் சரணடைகின்றனர். உலகிலுள்ள அரசியல் தத்துவங்களைப் பார்க்கிலும் எந்தவகையிலும் கடவுள் என்கிற கருத்துருவாக்கம் மோசமானதில்லை என்பதே எனது அனுபவமும். அறிஞர் கோவை ஞானி அவர்களின் 'அகமும் புறமும்' என்கிற தொகுப்பினை வாசிக்க நேர்ந்தது. அதில் 'பின்தொடரும் நிழலின் குரல்' குறித்து அவர் எழுதியிருப்பதை ஆவலோடு வாசித்தேன். அவர் அந்தக் கட்டுரைக்கு வைத்திருந்த தலைப்பு 'நம்மைப் பின்தொடரும் ஜெயமோகனின் குரல்'


04


உயர்ந்த ஆளுமைகளின் நட்பையும் நேசத்தையும் பெறுவது நல்லூழ். நானும் ஜெயமோகனும் நட்பையும் நேசத்தையும் பரஸ்பரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். அவரது பகடியும் எள்ளலும் மிகுந்த உரையாடல் பொழுதுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் அமைந்தன. அவர் ஒரு வெடிச்சிரிப்போடு சில இலக்கியச் சம்பவங்களைப் பகிர்வதுண்டு. என்னுடைய 'ஆகுதி' சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கெடுக்க ஒத்துழைத்து சென்னை வருகிற நாட்கள் இனிமையானவை. சென்னையில் நிகழ்த்தப்பட்ட 'மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?' என்ற தலைப்பிலான கட்டண உரை நிகழ்வு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு செம்மார்ந்த பதிவு. எழுத்தாளனின் உரையைக் கேட்பதற்கு பணம் கொடுத்து வருகிற பிரகாசமான வாசகர்கள் அங்கு கூடினர். அரங்கு முழுதும் நிரம்பிய பின்னர் திருவெற்றியூரில் இருந்து வந்த வாசகர் ஒருவர் தன்னை உள்ளே அனுமதிக்குமாறும்  நின்றுகொண்டே உரையைக் கேட்பேன் எனவும் சொன்ன பொழுதை நினைத்துப் பார்க்கிறேன். அது எனக்கு ஒரு கனவைப்போல இருந்தது. இந்த சென்னை மாநகரில் வேலை தேடி வந்து நாளாந்த உணவுக்குச் சிரமப்பட்டு எழுதிக்கொண்டிருந்த புதுமைப்பித்தனின் நினைவுகள் அலை அலையாக எழும்பி வந்தன. ஒரு நவீன எழுத்தாளன் ஆற்றக்கூடிய உரையை பொருள் அளித்து கேட்க வரும் மாண்பு கொண்டவர்களை தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கிறது என்பதை அறிந்துகொண்டோம்.


பிறகு என்னுடைய சிறுகதைகள் சில வெளியானபோது அதனை வாசித்து தனது மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொண்டார். அவருடைய இணையதளத்தில் அதனை மீள் வெளியிட்டு ஊக்கமளித்தார். 'மாபெரும் தாய்' சிறுகதை வெளியானதும் அதனை வாசித்துவிட்டு ஜெயமோகன் தொடர்பில் வந்தார். அந்தக் கதையில் இயங்கிய சைவ மனத்தின் பண்பாட்டு அஸ்திவாரங்களைப்பற்றி நிறையவே பேசினார். வெகுவாகப் பாராட்டி உங்கள் பெயர் நிலைக்கும் சிறுகதைகளில் ஒன்று என விளித்தார். அதுவெனது எழுத்துக்குக் கிடைத்த திவ்விய நிமிடங்கள்.


ஜெயமோகனின் “மாடன் மோட்சம்” சிறுகதைக்கு என்னைவிட ஒரு வயது அதிகம்.  அவருடைய மகன், 'மைத்ரி' நாவலாசிரியர் அஜிதனும் நானும் வயதொத்த நண்பர்கள். இப்போது ஜெயமோகனுக்கு அறுபது வயதாகிறது. என்னுடைய அம்மாவின் வயது. கனிந்து பிழிந்த சாற்றின் நறுமணத்தோடு  இனிவரும் காலமும் இனிக்கட்டும். வாழ்த்துகள் எனதருமை  ஜெயமோகன்.


***


அகரமுதல்வன் - தமிழ் விக்கி பக்கம்

No comments:

Powered by Blogger.